கோவில் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்கும் விவகாரம்- செப்.30-க்கு விசாரணை ஒத்திவைப்பு
சென்னை: கோவில் நிலங்களை ஆக்கிரமித்தவர்களுக்கு பட்டா வழங்கும் வகையிலான அரசாணையின் கீழ் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதி தெரிவித்துள்ளது.
அரசு புறம்போக்கு மற்றும் கோவில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வந்தால் பட்டா வழங்கப்படும் என கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. சட்டவிரோதமாக நிலங்களை ஆக்கிரமிப்பவர்களுக்கு உதவும் வகையில் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அரசாணையை ரத்து செய்ய கோரி ராதா கிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த அரசாணை ஆக்கிரமிப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும் நிலங்களை கையகப்படுத்த நிலம் கையகப்படுத்தும் சட்டம் இருக்கும் போது, இந்த உத்தரவு ஏன் கொண்டு வரப்பட்டது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அத்துடன் கோவில் சொத்துகளை பாதுகாக்கும் பொறுப்பு இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு உள்ளது.ஆனால் இந்த அரசாணை கோவில் சொத்துகளை விற்க, அவர்களை நிர்பந்திக்கும் வகையில் உள்ளது என தெரிவித்தனர்.
இந்த வழக்கில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய இருப்பதாகவும், அதுவரை இந்த அரசாணையின் படி எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது என அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் உறுதி அளித்தார். இதனையடுத்து, இந்த வழக்கு குறித்து பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை செப் 30ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.