சுபஶ்ரீ மரணம்: அலட்சியம், மெத்தனம்...நிர்வாகத்தை அரசு ஒழுக்கமாக நடத்த வேண்டும்- ஹைகோர்ட் விளாசல்
சென்னை: பேனர்கள் விவகாரத்தில் அதிகாரிகளின் அலட்சியம் மற்றும் மெத்தனப் போக்குதான் சுபஶ்ரீயின் மரணத்துக்கு காரணம்... இன்னும் எத்தனை லிட்டர் ரத்தம் சிந்தினால் நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று சென்னை உயர்நீதிமன்றம் சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளது.
அதிமுக பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ பலியான சம்பவம் தொடர்பாக பேனர் வைத்தவர்கள் மீது கொலையல்லாத மரணம் விளைவித்த வழக்கில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரி வழக்கறிஞர்கள் லட்சுமி நாராயணன், கண்ணதாசன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர். இதனை நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் சேஷசாயி ஆகியோர் விசாரணைக்கு ஏற்றனர்.
முதலில் இவ்வழக்கில் தொடர்புடைய அனைத்து உயர் அதிகாரிகளும் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டது. பரங்கிமலை காவல் துணை ஆணையர் பிரபாகர், பள்ளிக்கரணை உதவி ஆணையர் சவுரிநாதன் மாநகராட்சி மண்டல துணை ஆணையர் ஆல்பி வர்கீஸ் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
பின்னர் சுபஸ்ரீ உயிரிழப்பு தொடர்பாக அரசு தலைமை வழக்கறிஞர், பள்ளிக்கரணை காவல் துறை, மாநகராட்சி அதிகாரிகளிடம் நீதிபதிகள், சரமாரியாக கேள்வி எழுப்பினார். இந்த விசாரணையின் போது நீதிபதிகள் எழுப்பிய கேள்விகள், முன்வைத்த கருத்துகள்:
- பேனர் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் மக்களின் ரத்தத்தை உறிஞ்சுபவர்களாக அரசு அதிகாரிகள் உள்ளனர்.
- பேனர்களை வைப்பதை தடுக்க அரசுக்கு பொதுமக்களின் ரத்தம் இன்னும் எத்தனை லிட்டர் வேண்டும்?
- ஒவ்வொரு குடிமக்களின் உயிருக்கும் அரசு அளிக்கும் மதிப்பு இதுதானா?
- திருமணம், காது குத்து, கடாவெட்டிற்கெல்லாம் பேனர் வைத்து அழைத்தால் தான் அரசியவாதிகள் வருவார்களா?
- தமிழகத்தில் பொதுமக்களின் உயிருக்கு உத்தரவாதம் பூஜ்ஜிய நிலையில் உள்ளது. இழப்பீடு வழங்கினால் மட்டும் உயிர் திரும்பி வந்து விடுமா?
- அரசின் அலட்சியத்தால் ஏன் மக்களின் ரத்தம் தொடர்ந்து சாலைகளில் கொட்டப்படுகிறது சுபஸ்ரீ இழந்து நிற்கும் பெற்றொர்களுக்கு அரசு என்ன சொல்ல போகிறது?
- நிர்வாகத்தை அரசு ஒழுக்கமாக நடத்த வேண்டும். எந்த அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்களும் இதுவரை பேனர் வைக்க கூடாது என அறிக்கை கூட விட்டதில்லை
- மெரினாவில் சாலையில் நடுவே இரும்பு கம்பியால் ஆன கொடிக்கம்பங்களை நட யார் அனுமதி வழங்கியது? முதல்வர் இது போன்ற பேனர் வைக்க வேண்டாம் என அறிக்கையில் தெரிவிக்க வேண்டும்
- இளம்பெண்ணின் ரத்தம் சிந்திய நிகழ்வை அரசியலாக்காமல், பேனர் வைக்கமாட்டோம் என்பதை எல்லா அரசியல் கட்சிகளும் அறிவிக்க வேண்டும்
- சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் லாரி ஓட்டுனர் மீது மட்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் எந்தெந்த அரசியல் கட்சிகள் மீது இது வரை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன?
- பேனர் வைக்க அனுமதி வழங்கிய அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன?
- இனி பேனர் வைக்கமாட்டோம் என அரசியல் கட்சிகள் மற்றும் அதன் தலைவர்கள் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரமாக ஏன் தாக்கல் செய்ய கூடாது?
- திருமணம், காதுகுத்து என அனைத்துக்கும் பேனர் வைக்கிறார்கள் விவாகரத்திற்கு மட்டும் தான் பேனர் வைக்கவில்லை/
- சுபஸ்ரீ உயிரிழந்த நிகழ்வில், அவரின் தந்தை புகார் அளிக்கும் வரை ஏன் போக்குவரத்து காவல்துறை வழக்குப்பதிவு செய்யவில்லை?
- மதியம் 2.30 மணிக்கு நடத்த விபத்தில் இரவு 8 மணிக்கு தான் வழக்கு பதிவு செய்யப்பட்டது- உடனடியாக வழக்கு பதிவு ஏன் செய்யவில்லை
- பேனர்களில் இடம்பெற்றிருக்கும் கலர்தான் தான் காவல் துறை நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு காரணமா?
- மாநகராட்சி, காவல்துறை கடமையை செய்ய தவறியுள்ளதே சுபஸ்ரீ உயிரிழப்பு காரணம்
- தலைமை செயலர், நகராட்சி நிர்வாக செயலாளர் ஆகியொர் நீதிமன்றத்தில் பதில் மனுக்களில் சொன்னது போல் விதிமீறல் பேனர்கள் மீதான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. அவர்கள் நடவடிக்கை எடுத்திருந்தால் சுபஸ்ரீ யின் உயிர் அநியாமாக பறிபோயிருக்காது,
- பேனர்கள் தொடர்பாக முறையான கண்கானிப்பு இல்லை; அதிகாரிகளின் அலட்சியமும் மெத்தப்போக்கும் தான் காரணம். ஆகையால் உரிய நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்
- சுபஸ்ரீ உயிரிழந்த நிகழ்வில் அலட்சியமாக கவனகுறைவாக இருந்த காவல்துறை, மாநகராட்சி அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.
- சுபஸ்ரீ உயிரிழப்புக்கு காரணமாக இருந்த. மாநகராட்சி, காவல்துறை அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக தலைமை செயலாளர் கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
- அரசியல் கட்சிகள் பேனர் வைக்கமாட்டோம் என அறிக்கையாக வெளியிட்டதை, பேனர் வைக்க மாட்டோம் என்று உறுதி அளிக்கும் வகையில் மனுவாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
- சுபஸ்ரீ உயிரிழப்புக்கு இடைக்கால இழப்பிடு வழங்கி, அதை மெத்தனமாக இருந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அரசு வசூசுலிக்க வேண்டும்.
- சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கு தொடர்பான விசாரணையை சென்னை மாநகர காவல் ஆணையர் கண்கானிக்க வேண்டும்,
- இந்த முழு வழக்கையும் உயர்நீதிமன்றம் முழுமையாக கண்காணிக்கும். இது தொடர்பாக எடுத்த நடவடிக்கைகளை அரசு தரப்பு தாக்கல் செய்ய வேண்டும்.
- இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை செப்டம்பர் 25 ந் தேதி நடைபெறும்.
இவ்வாறு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
சுபஶ்ரீயை பலிகொண்டது யார்? டிரெண்டிங்கான ஹேஷ்டேக்குகள் #WhoKilledShubashree