அயனாவரம் சிறுமி பலாத்காரம்.. 16 பேருக்கும் போடப்பட்ட குண்டாஸ் ரத்து
பலாத்கார வழக்கில் 16 பேர் மீதான குண்டர் சட்டத்தை ஐகோர்ட் ரத்து செய்தது
சென்னை: அயனாவரம் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 16 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததை இன்று சென்னை ஐகோர்ட் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
அயனாவரத்தில் அபார்ட்மெண்ட் ஒன்றில் வசித்து வந்த 13 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை 17 பேர் பாலியல் பலாத்காரம் செய்தார்கள்.
இவர்களில் லிப்ட் ஆப்ரேட்டர்கள், எலக்ட்ரீஷியன்கள், வாட்ச்மேன்கள் என்று பலர் உண்டு. இதுபோக இந்த 17 பேரில் வயதானவர்களுக்கும் சம்பந்தப்பட்ட விஷயம் தெரிந்து ஒட்டுமொத்த தமிழகமும் கொதிப்புக்கு உண்டானது.
குண்டர் சட்டம்
இதையடுத்து இவர்கள் அனைவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். பின்னர் இது சம்பந்தமாக வழக்கும் பதிவு செய்யப்பட்டதுடன், அனைவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கடந்தாண்டு செப்டம்பர் 5 -ஆம் தேதி கைது செய்தனர். இதற்கான உத்தரவினை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டிருந்தார்.
ஒரு வருடம் சிறை
அதோடு ஒரு வருஷம் சிறையில் அடைக்கவும் உத்தரவு போட்டார். இதன் அடிப்படையில், குற்றவாளிகள் 17 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இதை தவிர போக்சோ வழக்கு ஒன்று இவர்கள் மீது பதியப்பட்டு அது சம்பந்தமான விசாரணையும் சென்னை மகளிர் கோர்ட்டில் நடந்து வருகிறது.
வாபஸ் பெற்றார்
இதனிடையே, தங்கள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரியும், போலீஸ் கமிஷனர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்தும் 17 பேர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்கள். இதில் ஒருவர் மட்டும் தனது மனுவை வாபஸ் பெற்றுக் கொண்ட நிலையில், மற்ற 16 பேர் தொடுத்த வழக்கு சம்பந்தமான விசாரணையும் மற்றொரு புறம் நடந்து வந்தது.
சரியானது இல்லை
இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளனர். அதன்படி "குண்டர் சட்டத்திற்கு எதிரான மனுவை பரிசீலிப்பதில் அறிவுரைக்கழகம் தாமதம் செய்துள்ளது. 16 பேரையும் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் பிறப்பித்த உத்தரவு சட்டப்படி சரியானது இல்லை. எனவே, இந்த உத்தரவை ரத்து செய்கிறோம்" என்று உத்தரவிட்டுள்ளனர்.