சென்னை ஹைகோர்ட் வளாகத்தில் பேரணி- மாஜி நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதி சாஹி கடும் கண்டனம்
சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் முன்னாள் நீதிபதிகள் பேரணி நடத்தியது துரதிருஷ்டவசமானது என தலைமை நீதிபதி சாஹி வேதனை தெரிவித்துள்ளார்.
சி.ஐ.எஸ்.எஃப் பாதுகாப்பை சென்னை உயர் நீதிமன்ற வளாகம் முழுமைக்கும் விரிவுபடுத்தக் கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காந்தியடிகள் நினைவுதினமான நேற்று கடைபிடிக்கப்பட்ட தியாகிகள் தினத்தையொட்டி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் அமைதி ஊர்வலம் நடத்தப்பட்டதற்கு தலைமை நீதிபதி சாஹி கடும் கண்டனம் தெரிவித்தார்.
இதில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஹரி பரந்தாமன், கண்ணன் ஆகியோர் பங்கேற்றது வேதனை அளிப்பதாகவும் இது நீதிமன்றத்திற்கு மிகப்பெரிய பாதிப்புகளை உருவாக்கும் என்றார். மேலும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் பங்கேற்றதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது; நீதிமன்ற வளாகத்திற்குள் பேரணியில் பங்கேற்றது நீதிபதிகள் மாண்பை சீர்கெடுக்கும் செயலாக உள்ளது; இந்த பேரணியின் போது பிரச்சனை நிகழ்ந்திருந்தால் யார் மீது வழக்குப்பதிவு செய்வது? நீதிமன்றம் பொது சொத்து, தனி நபர்களுடையது அல்ல என்பதை ஓய்வு பெற்ற நீதிபதிகள் உணர்ந்து செயல்ப்பட வேண்டும் என்றார்.
அத்துடன் நீதிபதிகளாக இருந்தவர்கள் ஓய்வு பெற்ற பிறகும் நீதிபதிகளாக கருதப்படுவர். அவ்வாறு இருக்க வேண்டியவர்கள் நீதிமன்றத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயல்படலாமா? இதை மன்னிக்கவே முடியாது; போராட்டம் பேரணி நடத்துவதற்கான இடம் நீதிமன்றம் இல்லை; நீதிமன்ற வளாகத்தில் அத்துமீறி முன்னாள் நீதிபதிகள் ஹரிபரந்தாமன், கண்ணன், அக்பர் அலி ஆகியோர் பேரணி நடத்தியது குறித்து நீதிமன்ற பாதுகாப்பு குழு விசாரிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
வன்முறை போராட்டங்களால் நாடு பலவீனமடைந்துவிடும்: நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சென்னை உயர் நீதிமன்றத்திற்கு பாதுகாப்பு இல்லை. வழக்கறிஞர்கள் போர்வையில் நக்சல்கள் அதிகரித்து வருகின்றனர். அவர்களை நீதிமன்றத்திற்கு வரவிடாமல் தடுக்க முடியவில்லை. இது மட்டுமல்லாமல் நீதிமன்ற வளாகத்திற்குள் குடிப்பது போன்ற சட்ட விரோத நடவடிக்கைகளும் அதிகரித்துள்ளன. எனவே சென்னை உயர் நீதிமன்ற வளாகம் முழுமைக்கும் சிஐஎஸ்எப் பாதுகாப்பை விரிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
பின்னர் சென்னை உயர் நீதிமன்றம் முழுமைக்கும் சி ஐ எஸ்.எப் பாதுகாப்பை நிரந்தரமாக வழங்குவது தொடர்பாக நீதிமன்ற பாதுகாப்பு குழு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை மார்ச்2 ம் தேதிக்கு ஒத்தி வைத்தார் தலைமை நீதிபதி சாஹி..