ஜெ., வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு தடை விதிக்க முடியாது - ஹைகோர்ட்
ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் அரசின் நடவடிக்கைக்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
சென்னை: ஜெயலலிதாவுக்கு அதிக தொண்டர்கள் உள்ளதால், தமிழக மக்கள் அவரது இல்லத்துக்கு வருகை தந்து பார்வையிடுவதற்காக, அவர் வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற அரசு முடிவு செய்திருக்கிறது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். தலைவர்கள் வாழ்ந்த வீட்டினை நினைவு இல்லமாக மாற்றுவது புதிதல்ல. மக்களின் அன்பையும் மரியாதையையும் பெற்ற பல தலைவர்களின் இல்லங்கள் நினைவில்லமாக மாற்றப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையில் தலையிட முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. போயஸ் கார்டன் மற்றும் கஸ்தூரி எஸ்டேட் குடியிருப்புவாசிகள் சங்கம் சார்பில், மக்கள் மற்றும் மனுதாரர் சங்கத்தின் எதிர்ப்பையும் மீறி கையகப்படுத்தும் பணி தொடர்கிறது,சட்ட விதிகளை மீறி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் எந்த பதிலும் இல்லை, பொதுமக்களின் வரிப்பணத்தில் தற்போதைய நிதி நெருக்கடி சூழலில் இந்த நடவடிக்கை தேவை இல்லை என்றும் எனவே இந்த நடவடிக்கைக்கு தடை விதிக்கவேண்டும் எனவும் வாதிடப்பட்டது.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜயநாராயண், கடந்த 5/10/2017 முதல் நடவடிக்கை துவங்கியது. இது முதல் நினைவு இல்லம் அல்ல. காமராஜர், வ.உ.சி. உள்பட 20-30 நினைவில்லங்கள் உள்ளன. சுற்றுலா துறையால் பராமரிக்கப்படுகிறது. நிலம் கையகப்படுத்த நடவடிக்கை தொடங்கி ஒன்றரை ஆண்டுகளாகிறது. ஏற்கனவே பொது நல வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. விதிமீறல்கள் ஏதும் இல்லை. ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஒரு பகுதியை நினைவு இல்லமாகவும் மற்றொரு பகுதியை முதலமைச்சரின் அதிகாரப்பூர்வமாக மாற்றுவது தொடர்பாக அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக குறிப்பிட்டார்.
கொரோனாவை விரட்ட கைகொடுத்த இயற்கை மருத்துவம், யோகா.. அமைச்சர் விஜயபாஸ்கர் சொன்ன சூப்பர் தகவல்
கையகப்படுத்தும் நடவடிக்கை இறுதி முடிவை எட்டவில்லை. அப்போது மனுதாரர்களின் குறைகள் பரிசீலிக்கப்படும் என்றும் வாதிட்டார்.
இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஜெயலலிதாவுக்கு அதிக தொண்டர்கள் உள்ளதால், தமிழக மக்கள் அவரது இல்லத்துக்கு வருகை தந்து பார்வையிடுவதற்காக, அவர் வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற அரசு முடிவு செய்திருக்கிறது. நினைவு இல்லமாக மாற்றுவது புதிதல்ல. மக்களின் அன்பையும் மரியாதையையும் பெற்ற பல தலைவர்களின் இல்லங்கள் நினைவில்லமாக மாற்றப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையில் தலையிட முடியாது. உயர் நீதிமன்ற ஆலோசனையை அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக கூறியுள்ளது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.