10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்
திமுக தொடர்ந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: முற்பட்ட வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீட்டிற்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் 2 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சமுதாயத்தினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்தது. இதற்கான ஒப்புதலை குடியரசு தலைவரிடம் பெற்று கடந்த ஜனவரி 14 ஆம் தேதி அமல்படுத்தவும் செய்தது.
ஆனால் இந்த மசோதாவுக்கு பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் வெளிப்படையான எதிர்ப்பை காட்டவில்லை. அதோடு, இந்த மசோதாவுக்கு ஆதரவையும் தந்தது. ஆனால் திமுக, அதிமுக எம்பிக்கள் இதற்கு பலமான எதிர்ப்பை காட்டினார்கள்.
ஹைகோர்ட்டில் வழக்கு
கடுமையாக விமர்சித்து தங்களது ஆதங்கத்தை இரு அவைகளிலும் கொட்டினார்கள். சட்டமன்ற கூட்டத்தில்கூட 10 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து ஸ்டாலின் பேசினார். ஆனாலும் எதிர்ப்புக்களையும் மீறி மசோதா நிறைவேற்றப்பட்டு தற்போது சட்டமாகி விட்டது. இந்த நிலையில் இதை எதிர்த்து திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
பாதிப்பு ஏற்படும்
அதில் "முற்பட்ட வகுப்பினருக்கு பொருளாதார அடிப்படையில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டால் ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டில் கண்டிப்பாக பாதிப்பு ஏற்பட நிறைய வாய்ப்புள்ளது. அதனால் இந்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும்" என்று கோரியிருந்தார்.
சமூகரீதியில் ஒதுக்கீடு
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக தரப்பில் "பொருளாதாரம் என்பது அடிப்படையில் மாறக்கூடியது. எனவே அதன் அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிக்கக் கூடாது என வாதம் செய்யப்பட்டது. மேலும் சமூகரீதியில்தான் இடஒதுக்கீடு தர வேண்டும் என்றும் அழுத்தமாக வலியுறுத்தப்பட்டது.
2 வார காலம்
வாதத்திற்குப் பின்னர் 10% இட ஒதுக்கீடு குறித்து 2 வாரத்தில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என்று கூறி 2 வாரத்திற்கு நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.