தேர்வு முறையில் புதிய விதிமுறை.. அண்ணா பல்கலைக்கழகத்துக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்
சென்னை: தேர்வு முறையில் அண்ணா பல்கலைக்கழகம் கொண்டு வந்த புதிய விதிமுறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 2 வாரங்களில் பதிலளிக்க உயர்கல்வி துறை மற்றும் அண்ணா பல்கலைகழகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்ணா பல்கலைகழகம் பொறியியல் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வில் புதிய திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி மாணவர் ஒருவர் ஒரு செமஸ்டரில் தோல்வியடைந்தால் மறு தேர்வு எழுத அவருக்கு மூன்று வாய்ப்புகள் வழங்கப்படும்.
கொடுக்கப்பட்ட மூன்று வாய்ப்புகளிளும் தேர்ச்சியடையாவிட்டால், மேற்கொண்டு தேர்ச்சியடையும் வரை அடுத்த செமஸ்டருக்கு செல்ல முடியாது என விதிமுறை கொண்டு வரப்பட்டது.
இந்த புதிய விதிமுறையை ரத்து செய்யக்கோரி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஜே கே கே நடராஜ பொறியல் கல்லூரியை சேர்ந்த மெளலி மற்றும் பிரியதர்சினி உள்ளிட்ட 10 மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அதில், இந்த புதிய விதிமுறையால் தங்களின் தேர்ச்சி சதவீதம் பாதிக்கப்படுவதுடன், கல்லூரி படிப்பை முடித்து உடனடியாக வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும் எனவும் இந்த புதிய நடைமுறையை 2 மற்றும் 3 ஆண்டு மாணவர்களுக்கு நடைமுறை படுத்த தடை விதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று நீதிபதிகள் சத்தியநாரயணன், சேசஷாயி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாணவர்கள் சார்பில் வழக்கறிஞர் கந்தவடிவேல் ஆஜராகி, இந்த புதிய தேர்வு நடைமுறையால் 2 மற்றும் 3ஆம் ஆண்டு படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதால் அவர்களுக்கு பழைய நடைமுறையே செயல்படுத்த வேண்டும் என வாதிட்டார்.
இதை கேட்ட நீதிபதிகள், வழக்கு தொடர்பாக உயர்கல்வி துறை மற்றும் அண்ணா பல்கலைகழகம் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை அக்டோபர் 10 ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.