காஞ்சி கோவிலில் வடகலை, தென்கலை பஞ்சாயத்து... சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் கடும் அதிருப்தி
சென்னை: கடவுள் முன் பிரச்னை செய்பவர்களுக்கு கருவறையில் இடமில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோவில் பிரச்னை தொடர்பாக தென்கலை பிரிவினர் தொடர்ந்த வழக்கில், வடகலை வைணவர்கள், காவல் துறை, கோவில் செயல் அதிகாரி ஆகியோர் பதிலளிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோவிலில் ஆழ்வார்கள் தமிழில் எழுதிய 4 ஆயிர திவ்ய பிரபந்தத்தை பாடவேண்டும் என, தென் கலை வைணவர்களும், சமஸ்கிருத வேதங்களை பாராயணம் செய்ய வேண்டும் என வடகலை வைணவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக, இரு தரப்பினரையும் தலா 25 ஆயிரம் ரூபாய்க்கு பிணையப் பத்திரம் செலுத்த வேண்டும் என, காஞ்சிபுரம் சப் கலெக்டர் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி, தென்கலை வைணவர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், சப் கலெக்டரின் உத்தரவால் இரு தரப்பினரும், பிரபந்தம் பாடுவதிலும், வேத பாராயணம் செய்வதிலும் எந்த பாதிப்பும் இல்லை எனக் குறிப்பிட்டார்.
நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பான வழக்குகளில் சென்னை ஹைகோர்ட் இன்று தீர்ப்பு!
யார் பெரியவர் என இரு தரப்பினரும் காட்டிக் கொள்வதால் பக்தர்கள் சிரமத்துக்கு ஆளாவதாகச் சுட்டிக் காட்டிய நீதிபதி மகாதேவன், கடவுள் முன் பிரச்னை செய்பவர்களுக்கு, கருவறையில் இடமில்லை என்றார். மேலும் இவ்வழக்கில் இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி, வடகலை வைணவர்களுக்கும், விஷ்ணு காஞ்சி காவல் ஆய்வாளருக்கும், தேவராஜ ஸ்வாமி கோவில் செயல் அதிகாரிக்கும் நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டார்.