திருமாவளவன் தேர்தல் வழக்கு: காட்டுமன்னார்கோயில் தேர்தல் அதிகாரி நேரில் ஆஜராக ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தொடர்ந்த வழக்கில் காட்டுமன்னார்கோயில் சட்டசபை தொகுதியில் நிராகரிக்கப்பட்ட 102 தபால் வாக்குகளுடன் அத்தொகுதியின் தேர்தல் அதிகாரி முத்துக்குமாரசாமி ஜனவரி 20ல் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட்ட திருமாவளவன், 87 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக முருகுமாறனிடம் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனை செல்லாது என அறிவிக்கக் கோரி திருமாவளவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, 102 தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் திருமாவளவன் 87 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த தொகுதியின் தேர்தல் அதிகாரி முத்துக்குமாரசுவாமியை சாட்சியாக விசாரிக்கும் போது நிராகரிக்கப்பட்ட 102 தபால் வாக்குகளை சமர்பிக்கும் படி மனுதாரரோ, எதிர் மனுதாரரோ கோரவில்லை என குறிப்பிட்ட நீதிபதி இந்த வழக்கில் தீர்ப்பளிக்கும் முன் நிராகரிக்கப்பட்ட 102 தபால் வாக்குகளை ஆய்வு செய்யவேண்டும் என்றார்.
இதனையடுத்து காட்டுமன்னார்கோயிலில் தேர்தல் அதிகாரியாக இருந்த முத்துகுமாரசுவாமி நிராகரிக்கப்பட்ட 102 தபால் வாக்குகளுடன் ஜனவரி 20-ந் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பவும் நீதிபதி சி.வி.கார்த்திகேயன் உத்தரவிட்டார்.
அந்த பக்கம் ஒரு பாட்டி.. இந்த பக்கம் ஒரு பேத்தி.. நடுவுல ரியா.. சபாஷ் மக்களே..இதுதான் அதிரடி மாற்றமோ