ஆதி திராவிட மாணவர்களின் கல்வி நிதியில் கையாடல்.. ஹைகோர்ட் நோட்டீஸ்
சென்னை: ஆதிதிராவிடர் மாணவர்களின் கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதியை கையாடல் செய்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில், நீதிமன்றத்துக்கு உதவ அக்டோபர் 21ம் தேதி உரிய ஆவணங்களுடன் ஆஜராக ஆதிதிராவிடர் நலத் துறை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆதிதிராவிட மாணவர்களின் கல்விக்காக பல்வேறு உதவித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த உதவித் தொகைகளை பல்வேறு துறை அதிகாரிகள் சுரண்டுவதாக கூறி, நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில், இந்த கையாடல்கள் குறித்து அரசுக்கு பல முறை புகார் அளித்ததை அடுத்து, தணிக்கை குழு அமைக்கப்பட்டது. இந்த குழு அளித்த அறிக்கையில், 17 கோடியே 36 லட்சம் ரூபாய் அளவுக்கு கையாடல் நடந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதுசம்பந்தமாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அளித்த புகார், ஆதிதிராவிடர் நலத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது... ஆனால் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அடங்கிய அமர்வு, இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக உரிய ஆவணங்களுடன் அக்டோபர் 21ம் தேதி நேரில் ஆஜராகும்படி, ஆதிதிராவிடர் நலத் துறை செயலாளருக்கு உத்தரவிட்டது.