கொரோனா- மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்த்த வழக்கு- அரசுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்
சென்னை: கொரோனாவால் பலியான மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து தாக்குதல் நடத்திய வழக்கில் தமிழக அரசு வரும் 28-ந் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக மரணமடைந்த நரம்பியல் நிபுணராக, 30 ஆண்டுகளாக மக்களுக்கு சேவை செய்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய கீழப்பாக்கம் பகுதியில் உள்ள மயானத்துக்கு மருத்துவமனை ஊழியர்கள் ஆம்புலன்ஸில் எடுத்து சென்றனர். அப்போது, மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால், உடலை வேறு ஒரு மயானத்துக்கு எடுத்துச் செல்ல முற்பட்ட போது, அவரது உடலை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால், அரசு ஊழியர்களும் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தனியார் தொலைக்காட்சி செய்தியின் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல் குமார் அடங்கிய பெஞ்ச், கொரோனா தொற்றால் பலியானவர்களின் உடல்களை கையாள்வது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சில வழிகாட்டி விதிமுறைகளை அறிவித்துள்ளதாகச் சுட்டிக் காட்டியுள்ளது.
கண்ணியமான நல்லடக்கம் என்ற உரிமை, புனிதமான மருத்துவ தொழில் செய்தவரின் உடலுக்கு வழங்கப்படவில்லை எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், கடமையைச் செய்யச் சென்ற அதிகாரிகள் தாக்கப்பட்டிருக்கிறார்கள் எனவும், குடிமக்கள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தினர்.
எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தமிழக தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், சுகாதாரத் துறை செயலாளர், மாநகராட்சி ஆணையர், சென்னை மாநகர காவல் ஆணையர் ஆகியோர் ஏப்ரல் 28 ந் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அன்றைய தினத்திற்கு தள்ளிவைத்தனர்.