ஆன்லைனில் பணம் செலுத்தினால் 2 மது பாட்டில் தரலாம்.. நிபந்தனையுடன் டாஸ்மாக் திறக்க ஹைகோர்ட் அனுமதி
சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளை நாளை திறப்பதற்கு தடை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. மேலும் நிபந்தனைகளுடன் கடைகளை நாளை திறக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
டாஸ்மாக் கடை திறப்பதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, தற்பொழுது உள்ள சூழலில் மதுக் கடைகளை திறந்தால் நோய் தொற்று பெருமளவில் பெறுவதற்கு காரணமாக அமைந்துவிடும், மதுபானம் அத்தியாவசிய பொருள் அல்ல, டாஸ்மாக் கடைகள் நோய் தொற்று பரவும் ஹாட்ஸ்பாட் மையமாக மாறிவிடும்.
சட்டம்-ஒழுங்கு பெருமளவில் பாதிக்கப்படும், உரிய ஆலோசனை மேற்கொள்ளப்படாமல் அண்டை மாநிலங்களில் மதுக்கடைகளை திறந்துவிட்டார்கள் என்பதை காரணம் கூறி அரசு இந்த முடிவை மேற்கொண்டுள்ளது, தொடர் மது அருந்தும் பழக்கம் உடையவர்கள் அதிலிருந்து விடுபட்டுள்ள நிலையில் மதுக்கடைகளை திறப்பது அவர்களை மீண்டும் மதுப்பழக்கத்திற்கு அடிமையாக்கிவிடும், மருத்துவரீதியாக தற்போது மதுக் கடைகள் திறப்பது உகந்ததல்ல என்று மருத்துவ நிபுணர்கள் கூறி வரும் நிலையில் அரசு எடுத்திருக்கும் முடிவுக்கு தடை விதிக்க வேண்டும். ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது 17-ஆம் தேதி வரை மதுக்கடைகளை திறக்க நீதிமன்றம் அனுமதிக்கக்கூடாது என்று வாதிடப்பட்டது.
அதேபோன்று மனுதாரர் வழக்கறிஞரும் மற்றும் இரு வழக்கறிஞரும் மதுக்கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்தனர். அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராகி அண்டை மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் நாங்களும் திறக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கொரோனா: தடுப்புகளை நீக்கக் கோரும் வழக்கு.. தமிழக அரசு பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு
அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மதுக்கடைகளில் பெருமளவில் கூட்டம் கூடாமல் சமூக இடைவெளிவிட்டு மதுபானங்களை வாங்குவதற்கான விரிவான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது என்று வாதிட்டார்
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், டாஸ்மார்க் மதுபானங்களை ஆன்லைனில் விற்க முடியுமா? வீடுகளுக்கு நேரடியாகச் சென்று டெலிவரி செய்ய முடியுமா? மாற்று ஏற்பாடுகள் என்ன செய்யமுடியும் ஆகியவை குறித்து பிற்பகல் 2.30 மணிக்கு பதில் தர அரசுக்கு உத்தரவிட்டனர்.
சாத்தியம் இல்லை- தமிழக அரசு பதில்
பிற்பகலில் தமிழக அரசு தாக்கல்செய்த பதில் மனுவில், ஆன்லைனில் மதுபானங்களை விற்பனை செய்வது என்பது சாத்தியம் இல்லாதது. தற்போதைய நிலையில் உரிய தனிநபர் இடைவெளியுடன் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை பாதுகாப்பாக விற்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டிருந்தது.
தடை இல்லை- திறக்கலாம்
இதனையடுத்து மாலையில் தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம், தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளைத் திறக்க தடை எதுவும் இல்லை- தமிழகத்தில் நிபந்தனைகளுடன் டாஸ்மாக் மதுபான கடைகளை நாளை திறக்கலாம் என்று தீர்ப்பளித்துள்ளது.
அதே வேளையில் சில நிபந்தனைகளை பின்பற்றவும் உத்தரவிட்டது நீதிமன்றம்.அதன்படி ஆன் லைனில் மூலம் பணம் செலுத்தி அது தொடர்பாக விவரங்களை டாஸ்மாக்கில் கொடுத்தால், 750 மிலி கொண்ட 2 பாட்டில் பெற்று கொள்ளலாம்.
நேரடியாக டாஸ்மாக் கடைகளுக்கு சென்று பணம் செலுத்தினால் 750 மிலி கொண்ட ஒரு மது பாட்டில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். டிஜிட்டல் பில் வழங்க வேண்டும் அதில் வாங்கியவரின் பெயர் ஆதார் எண் கண்டிப்பாக இடம்பெற்றிருக்க வேண்டும்
மதுபாட்டில் பெற்றதில் இருந்து 3 நாட்கள் கழித்து தான் அடுத்தது மது வாங்க முடியும். பார்கள் செயல்படாது, கடை அருகே குடிக்க அனுமதியில்லை.இதில் குழறுபடி நடந்தாலோ, சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை என்றாலோ டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் நீதிமன்ற விதித்த நிபந்தனைகளை பின்பற்றி டாஸ்மாக் கடை திறக்க எடுத்த நடவடிக்கை குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை 14 ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.