டாக்சி வாகன உரிமையாளர்களுக்கு ரூ.15,000 நிதியுதவி கோரிய வழக்கு - தீர்ப்பு ஒத்திவைப்பு
கொரோனா லாக்டவுனால் பாதிக்கப்பட்டுள்ள வாடகை வாகன உரிமையாளர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கக் கோரி தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.
சென்னை: கொரோனா பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட லாக்டவுன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வாடகை வாகன உரிமையாளர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கக் கோரிய வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 100 நாட்களாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. பல தளர்வுகள் இருந்தாலும் சுற்றுலா செல்ல அனுமதியில்லை. போக்குவரத்து தடைபட்டுள்ளதால் வாடகை வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு சிக்கல் எழுந்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் சங்கம் சார்பில் அதன் செயலாளர் ஜூட் மேத்யூ சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தர்.
அந்த மனுவில், ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதால் வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்களுக்கு நிதியுதவியாக 15 ஆயிரம் ரூபாய் வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும், மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான சாலை வரியை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் தகுதிச் சான்றை புதுப்பிக்க ஆறு மாத கால அவகாசம் வழங்கவேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.
பெட்ரோல்- டீசல் விலை உயர்வு- கொடுங்கோன்மை அரசாட்சியின் உச்சம்:மத்திய பாஜக அரசு மீது சீமான் பாய்ச்சல்
போக்குவரத்து வாகனங்களுக்கு பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ் 50 ஆயிரம் ரூபாய் முதல் 2 லட்சம் வரை வட்டியில்லா கடனுதவி வழங்க வேண்டும் என்றும் சுங்கச்சாவடி கட்டணம், மாநிலங்களுக்கு இடையிலான வரிகளில் இருந்து விலக்களிக்கவேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த மனு இன்று நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ஊரடங்கு காரணமாக அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் யாரும் பாதிக்கப்படவில்லை என்ற நிலை தற்போது இல்லை என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதால் இழப்பீடுகள் கோரி தொடரப்பட்ட வழக்குகள் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுட்டிக் காட்டினார். இதையடுத்து, அந்த உத்தரவுகளை தாக்கல் செய்யும்படி, அரசுத்தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.