திருநங்கைகளின் வசதிக்காக 'பாலின சார்பற்ற' கழிப்பறை.. தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
"ஆண், பெண் கழிப்பிடங்களை தவிர்த்து கூடுதலாக பாலின சார்பற்ற (gender neutral) கழிப்பிடங்களை அமைப்பதன் மூலம் திருநங்கைகளின் உரிமைகள் பாதுகாக்கப்படும்"
சென்னை: திருநங்கைகளின் வசதிக்காக பொது இடங்களில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பறைகளை 'பாலின சார்பற்ற' கழிப்பிடங்களாக அறிவிக்கக் கோரும் மனுவுக்கு விளக்கமளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து ஃபிரெட் ரோஜர்ஸ் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், "2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் 22 ஆயிரத்து 364 திருநங்கைகள் உள்ளனர். இவர்களுக்கு முறையான கழிப்பிட வசதி பொது இடங்களில் இல்லை. இதனால் அவர்களின் அடிப்படை உரிமை மறுக்கப்படுகிறது. மேலும், தங்கள் விருப்பம் போல இரு பாலருக்கான கழிப்பிட வசதிகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து செல்லும் போது பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக நேரிடுகிறது.
தனி கழிப்பிட வசதிகள் வழங்குவதன் மூலம் சமூகத்தில் இருந்து அவர்கள் விலக்கி வைக்கப்படுகிறார்கள். எனவே, ஆண், பெண் கழிப்பிடங்களை தவிர்த்து கூடுதலாக பாலின சார்பற்ற (gender neutral) கழிப்பிடங்களை அமைப்பதன் மூலம் இவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் ஒருவர் செல்லும் வகையில் பாலின சார்பற்ற கழிப்பிடங்களை அமைக்க உத்தரவிட வேண்டும்" என அந்த மனுவில் அவர் தெரிவித்தார்.
இந்த மனுவானது, பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை ஆராய்ந்த நீதிபதிகள், ஆண் - பெண் கழிப்பறைகளை தவிர்த்து, மாற்றுத் திறனாளிகளுக்கும் தனி கழிப்பறைகள் உள்ளதாக சுட்டிக்காட்டி, அவற்றை பாலின சார்பற்ற கழிப்பறைகளாகவும் அறிவிப்பது குறித்து விளக்கமளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும், விசாரணையை பிப்ரவரி 7-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
கல்லூரி அருகே கஞ்சா விற்ற 2 பேர்.. தூக்கிய போலீஸ்.. 12 ஆண்டு கடுங்காவல்.. நீதிமன்றம் பரபர தீர்ப்பு