ஹைகோர்ட்டை நம்பி காலை வைத்த சினேகா.. கண்ணீரை துடைத்த சட்டம்... கிடைத்தது வேலை!
நாகை இளம்பெண் சினேகா தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நடந்தது
சென்னை: ஹைகோர்ட்டை நம்பி காலை வைத்தார் இளம்பெண் சினேகா.. அதன்பலனாக, இப்போது ஆதரவான உத்தரவு ஒன்றினை நீதிபதி பிறப்பித்துள்ளார்.. அதன்படி, குடும்ப சண்டை வழக்கை காரணம் காட்டி போலீஸ் வேலை வழங்க மறுக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் சினேகா.. இவர் சென்னை ஹைகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில் அவர் சொல்லி இருந்ததன் சுருக்கம்: "கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் நடைபெற்ற 2-ம்நிலை காவலர் பணிக்கான எழுத்து மற்றும் உடல்தகுதி தேர்வில் வெற்றி பெற்றேன்.. சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு பணியில் சேர இருந்த தருவாயில் தன் மீது கடந்த 2016-ம் ஆண்டு பதியப்பட்ட குற்ற வழக்கை காரணம் காட்டி எனக்கு போலீஸ் வேலை வழங்க முடியாது என நாகப்பட்டினம் எஸ்பி உத்தரவிட்டுவிட்டார்.
மேலும், 2016-ம் ஆண்டு எனது தாய், சகோதரி மற்றும் நாத்தனார் ஆகியோருக்கிடையே நடைபெற்ற மாமியார், மருமகள் குடும்ப சண்டையில் அப்போது மைனராக இருந்த எனது பெயரையும் குற்ற வழக்கில் போலீஸார் சேர்த்து விட்டனர். இப்போது சமரசம் ஏற்பட்ட நிலையில் எனக்கு பணி வழங்க உத்தரவிட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.. மனுவை நீதிபதி வி.பார்த்திபன் விசாரித்தார்.. பிறகு இதை பற்றி உத்தரவு பிறப்பிக்கும்போது,"குடும்பத்துக்குள் மாமியார், மருமகள் மற்றும் நாத்தனார் இடையே நடக்கும் குடும்ப சண்டை என்பது ஒரு சாதாரண நிகழ்வுதான்... இதையெல்லாம் ஒரு பெரிய குற்றமாக கருத வேண்டியது இல்லை... மேலும் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டபோது மனுதாரர் மைனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதனால், போலீஸ் வேலையில் சேர சினேகாவுக்கு எல்லா தகுதிகளும் இருக்கும்போது சாதாரண வழக்கை காரணம் காட்டி பணி வழங்க மறுப்பது ஏற்க முடியாது.. எனவே, மனுதாரர் சினேகாவுக்கு இன்னும் 4 வாரங்களில் உரிய போலீஸ் வேலை வழங்க வேண்டும்" என்றார்.