அவதூறு வழக்கு கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி தேவை.. ஸ்டாலின் மீதான 4 வழக்குகளை ரத்து செய்த ஹைகோர்ட்
சென்னை: தமிழகத்தில் அவதூறு வழக்குகளைப் போடும் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீதான 4 அவதூறு வழக்குகளையும் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
ஜெயலலிதா முதல்வராக பதவி வகித்த காலத்தில் மு.க.ஸ்டாலின் மீது 4 அவதூறு வழக்குகள், தமிழக அரசால் போடப்பட்டன. இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மு.க. ஸ்டாலின் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இம்மனுவை நீதிபதி என். சதீஷ்குமார் நேற்று விசாரித்தார். இந்த விசாரணையின் போது அரசு தரப்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன், ஸ்டாலின் தரப்பில் வழக்கறிஞர் குமரேசன் ஆகியோர் ஆஜராகினர். அப்போது இருதரப்பு வழக்கறிஞர்களும் அவதூறு வழக்கு தொடர்பான தங்களது கருத்துகளை முன்வைத்தனர்.
இதனையடுத்து தமிழகத்தில்தான் அரசியல் காரணங்களுக்கான அவதூறு வழக்குகள் அதிகமாக போடப்படுகின்றன. இந்த கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார் நீதிபதி சதீஷ்குமார். மேலும், பொதுவாழ்க்கையில் இருக்கும் அரசியல் தலைவர்கள் சகிப்புத்தன்மையுடன் இருக்க வேண்டும். நியாயப்பூர்வமான விமர்சங்களை எதிர்கொள்ள வேண்டும். மேலும் அரசியல் காரணங்களுக்காக பிறரது மனம் புண்படும்படியான விமர்சனங்களை தவிர்க்கவும் வேண்டும் என்றார் நீதிபதி சதீஷ்குமார்.
எனக்கு லேசான மயக்கம் மற்றும் உடல் சோர்வு இருந்தது.. முக ஸ்டாலின் விளக்கம்
அத்துடன், 2015 சென்னை பெருவெள்ளம் போன்ற நிலை தற்போது ஏற்படவில்லை. இம்முறை தமிழக அரசின் செயல்பாடு பாராட்டப்பட்டு வருகிறது என்றும் நீதிபதி சதீஷ்குமார் சுட்டிக்காட்டினார். இதனைத் தொடர்ந்து ஸ்டாலின் மீதான 4 கிரிமினல் அவதூறு வழக்குகளை தற்போது ரத்து செய்வதாகவும் 12 வழக்குகள் அடுத்த வார விசாரிக்கப்படும் என்றும் நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டார்.