ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீதான கருப்புப் பண வழக்கு... ரத்து செய்தது ஹைகோர்ட்!
சென்னை : முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது கருப்பு பண தடுப்பு சட்டத்தின் கீழ் வருமான வரித்துறையினர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி உள்ளிட்டோர் அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட நாடுகளில் வாங்கிய சொத்துகளை மறைத்ததாக வருமான வரித்துறை இவர்கள் மீது குற்றம்சாட்டியது.
லண்டனில் ரூ. 5.37 கோடி சொத்து மற்றும் ரூ. 80 லட்சம் மதிப்பிலான சொத்துகளும், அமெரிக்காவில் ரூ. 3.28 கோடி மதிப்புள்ள சொத்தும் வாங்கப்பட்டதற்கான விளக்கம் கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதனிடையே கருப்புப் பணம் தடுப்பு சட்டத்தின் கீழ் நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோருக்கு எதிராக வருமான வரித்துறை எழும்பூர் பொருளாதார குற்றப்பிரிவு கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது.
இந்நிலையில் இன்று தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் 3 பேருக்கு எதிராக கருப்பு பண மோசடி சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை தொடர்ந்த குற்ற வழக்கை ரத்து செய்வதாக அறிவித்தனர். மேலும் நளினி சிதம்பரம் உள்ளிட்ட 3 பேருக்கு எதிராக எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கையும் ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.