ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை இல்லை- ஹைகோர்ட்; ஜூலை 15-க்குள் வழிகாட்டு நெறிமுறை மத்திய அரசு
சென்னை: ஆன்லைன் வகுப்புகளை ஒழுங்குபடுத்த ஜூலை 15-க்குள் வழிகாட்டு நெறிகள் வெளியிடப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.
கொரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள லாக்டவுன் காரணமாக, பள்ளிகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், நடப்புக் கல்வியாண்டுக்கான பாடங்கள் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகின்றன.
ஆன்லைன் மூலம் வகுப்புகளில் கலந்து கொள்ள மாணவ, மாணவியர் முயற்சிக்கும் போது ஆபாச இணைய தளங்களால் அவர்களின் கவனம் சிதைவதால், அந்த இணையதளங்களை மாணவ, மாணவியர் அணுக இயலாத வகையில் விதிகளை வகுக்கும் வரை ஆன் லைன் வகுப்புக்களுக்கு தடை விதிக்கக் கோரி, சென்னை புத்தகரம் பகுதியைச் சேர்ந்த சரண்யா என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
இதேபோல, ஆன்லைன் வகுப்புகளை மொபைல் மூலமும், லேப் டாப் மூலமும் பார்ப்பதால் மாணவர்களின் கண்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் 1 ம் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரை ஆன் லைன் வகுப்புக்கள் நடத்த தடை விதிக்க வேண்டும் எனவும், 6 ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2 மணி நேரம் மட்டும் வகுப்புக்கள் நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரி விமல் மோகன் என்பவரும் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் மாணவர்களுக்கு ஏற்படும் கண் பாதிப்பு குறித்து கண் மருத்துவமனை டீன் அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் வழக்கு மீண்டும் நீதிபதிகள் எம்எம் சுந்தரேஷ் நீதிபதி ஹேமலதா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது
சீனாவுக்கு எதிராக டிரண்டாகும் ''ப்ரீ திபெத்''து.. தலாய் லாமாவுக்கு குவியும் பிறந்த நாள் வாழ்த்தும்!!
.அப்போது மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரபாகரன் மற்றும் ஜே. ரவீந்திரன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டார்கள். ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்ட படி அரசு கண் மருத்துவமனை டீன் எந்த ஒரு அறிக்கையும் இதுவரை தாக்கல் செய்யவில்லை என்றும் குறிப்பிட்டனர்.
அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் சங்கரநாராயணன் வருகிற ஜூலை 15ஆம் தேதிக்குள் ஆன்லைன் வகுப்புகளை ஒழுங்கு படுத்துவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட உள்ளதாக தெரிவித்தார். இதனால் வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்..
இதையடுத்து நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜூலை 20ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.. அதுவரை ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க கோரிக்கை வைக்கப்பட்டது.. ஆனால் அதை நீதிபதிகள் நிராகரித்து விட்டனர்.