புதுவை நெடுங்காடு எம்.எல்.ஏ. சந்திரா பிரியங்கா வெற்றி பெற்றது செல்லும்: ஹைகோர்ட்
சென்னை: புதுச்சேரி மாநிலம், நெடுங்காடு சட்டசபை தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. சந்திரா பிரியங்கா வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
புதுச்சேரி சட்டசபைக்கு கடந்த 2016 ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில், நெடுங்காடு தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சந்திரா பிரியங்கா, 8,789 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மாரிமுத்து 7,695 வாக்குகள் பெற்று 1,094 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
சந்திரா பிரியங்காவின் வெற்றியை எதிர்த்து மாரிமுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். அதில், சந்திராபிரியங்கா திருமணம் முடித்து திருச்சியில் வசித்து வருவதாகவும், அவர் குடும்ப அட்டை, இருப்பிட சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களையும் திருச்சியில் பெற்றுள்ள நிலையில், போலியான சான்றிதழ்களை தாக்கல் செய்து புதுச்சேரியில் தேர்தலை சந்தித்தால் அவரின் வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரவிச்சந்திரபாபு, சந்திரா பிரியங்கா தேர்தலுக்காக தாக்கல் செய்த சான்றிதழ்கள் போலியானவை அல்ல என்பது உறுதியாகியுள்ளதாக கூறி, மாரிமுத்து தொடர்ந்த தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.