வருமான வரித்துறை வழக்கு- கார்த்தி சிதம்பரத்தின் கோரிக்கையை நிராகரித்தது உயர்நீதிமன்றம்!
Recommended Video
சென்னை: தம் மீதான வருமான வரித்துறையின் வழக்கை சென்னை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க கூடாது என்ற காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்தின் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராக்கரித்துள்ளது.
கார்த்தி சிதம்பரம் மீது வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கை எம்.பி., எம்.ல்.ஏக்களை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த விசாரணைக்கு தடை கோரியும் சென்னை எழும்பூர் நீதிமன்றத்துக்கு வழக்கை மாற்றக் கோரியும் கார்த்தி சிதம்பரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இம்மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆதிகேசவலு இன்று நிராகரித்தார். இவ்வழக்கில் தலைமை பதிவாளர் பதில் மனு தாக்கல் செய்யும் வரை எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என நீதிபதி ஆதிகேசவலு தெரிவித்தார்.
மேலும் தமிழக அரசு, வருமான வரித்துறை, உயர்நீதிமன்ற பதிவாளர் ஆகியோர் ஆகஸ்ட் 30-க்குள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.
வழக்கு என்ன?
2015-16-ம் ஆண்டு வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்த கார்த்தி சிதம்பரம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு கிராமத்தில் உள்ள 1.18 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்ததை தெரிவிக்கவில்லை. இந்த விற்ப்பனையின் மூலம் கிடைத்த ரூ 1.35 கோடி வருமானத்தை தமது கணக்கில் கார்த்தி சிதம்பரம் காட்டவில்லை என்பது வழக்கு.
கார்த்தி சிதம்பரம். அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோருக்கு எதிராக வருமான வரித்துறை 2018-ல் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு சென்னை எழும்பூர் பொருளாதார குற்ற வழக்குகள் நீதிமன்றத்தில் இருந்து எம்.பி.- எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இதை எதிர்த்துதான் கார்த்தி சிதம்பரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.