ஜெ.வை ஜெயிலுக்கு அனுப்பிய வக்கீல் வெங்கடராமன் கொரோனாவுக்கு பலி- சு.சுவாமியின் 30 ஆண்டுகால நண்பர்!
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலிதா, சசிகல உள்ளிட்டோர் சிறைவாசம் அனுபவிக்க காரணமாக இருந்த சொத்து குவிப்பு வழக்கின் சூத்திரதாரி மூத்த வழக்கறிஞர் வெங்கடராமன் கொரோனா தொற்று நோய் தாக்கி உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு பாஜகவின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகித்து வந்தவர் மூத்த வழக்கறிஞர் வெங்கடராமன். காவிரி நடுவர் மன்றத்துக்கான தமிழக வழக்கறிஞராகவும் செயல்பட்டவர் வெங்கடராமன்.
கொரோனா சந்தேகம்; குவாரண்டைனில் இருந்த மகளுக்கு உயிரிழந்த தந்தையை பார்க்க 3 நிமிட அவகாசம்
ஜெ.- வெங்கடராமன் மோதல்
இதற்கான ஊதியத்தை தமிழக அரசு தரவில்லை என புகார் கூறியிருந்தார் வெங்கடராமன். பின்னர் அடுத்தடுத்து ஜெயலலிதா மீது ஏற்பட்ட மன வருத்தங்களால் அவருக்கு எதிராகவே திரும்பினார் வெங்கடராமன். ஜெயலலிதாவின் சொத்து விவரங்கள் அனைத்தும் அத்துப்படியாக தெரியும் என்பதால் இந்த ஆவணங்களை வைத்துக் கொண்டு வெங்கடராமன் முதன் முதலில் அணுகிய நபர்தான் சுப்பிரமணியன் சுவாமி.
பிரளயம் தந்த வழக்கு
இதன்பின்னர்தான் ஜெயலலிதாவுக்கு எதிராக சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார். கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற வழக்கு இந்த வழக்கு இந்திய நீதித்துறை வரலாற்றில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்வழக்கில்தான் ஜெயலலிதா சிறைவாசம் அனுபவித்தார். அவர் மறைந்துவிட்ட நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் தற்போது சசிகலா சிறைவாசம் அனுபவிக்கிறார்.
சசிகலாவுக்கு சிறை
தமிழக முதல்வராகிவிட வேண்டும் என்ற கனவுடன் சசிகலா பெரும் ஏற்பாடுகளை செய்திருந்தார். இந்த நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் மேல்முறையீட்டு தீர்ப்பு வெளியானது. ஜெயலலிதா மறைந்ததால் அவர் குற்றவாளியாக இருந்தாலும் விடுவிக்கப்பட்டார். சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோர் பெங்களூரு சிறையில் இருந்து வருகின்றனர். சசிகலா சிறைக்குப் போனதால் தமிழக முதல்வரானார் எடப்பாடி பழனிசாமி.
கொரோனாவால் பலி
இப்படி தமிழகத்தில் 30 ஆண்டுகால அரசியல் நிகழ்வுகளுக்கும் திருப்பங்களுக்கும் அடிப்படையாக இருந்த சொத்துக் குவிப்பு வழக்கின் சூத்திரதாரியே மூத்த வக்கீல் வெங்கடராமன்தான். அவர் கொரோனாவால் தாக்கப்பட்டு உயிரிழந்துவிட்டதாக அவரது நெருங்கிய சகாவான பாஜகவின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் மறக்காமல் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கையும் சுவாமி சுட்டிக் காட்டியுள்ளார்.