குட்கா விவகாரம்: திமுக எம்.எல்.ஏக்கள் மீதான உரிமை மீறல் நோட்டீஸுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை
சென்னை: குட்கா பொருட்களை சட்டசபைக்குள் எடுத்துச் சென்ற விவகாரத்தில் திமுக எம்.எல்.ஏக்கள் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 பேருக்கு 2-வது முறையாக அனுப்பப்பட்ட உரிமை மீறல் நோட்டீஸுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா போதை பொருட்கள் தங்குதடையின்றி விற்பனை செய்யப்படுகிறது என்பது திமுகவின் குற்றச்சாட்டு. இதனை நிரூபிக்கும் வகையில் 2017-ல் சட்டசபைக்குள் குட்கா பொட்டலங்களை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட திமுக எம்.எல்.ஏக்கள் எடுத்துச் சென்றனர்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தடை செய்யப்பட்ட பொருட்களை சட்டசபைக்குள் கொண்டு வந்ததாக ஸ்டாலின் உட்பட 18 எம்.எல்.ஏக்களுக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக எம்.எல்.ஏக்கள் 18 பேரும் வழக்கு தொடர்ந்தனர்.
திமுக எம்பி கதிர் ஆனந்த்தை உள்ளே புகுந்து மிரட்டியவர்கள் யார்.. அதிரடியை கையில் எடுத்த டெல்லி போலீஸ்
முதல் நோட்டீஸ் ரத்து
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், திமுக எம்.எல்.ஏக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட உரிமை மீறல் நோட்டீஸில் அடிப்படை தவறுகள் இருக்கின்றன. ஆகையால் அந்த நோட்டீஸை ரத்து செய்து உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து 2-வது முறையாக இதே விவகாரத்தில் திமுக எம்.எல்.ஏக்கள் 18 பேருக்கும் உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது.
அரசின் கவனத்துக்காகவே..
இதற்கு எதிராக திமுக எம்.எல்.ஏக்கள் மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, திமுக எம்.எல்.ஏக்களுக்கு அனுப்பப்பட்ட 2-வது உரிமை மீறல் நோட்டீஸுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த வழக்கில் அக்டோபர் 28-ந் தேதிக்குள் சபாநாயகர் பதிலளிக்கவும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.
பேச்சு சுதந்திரம் உள்ளது
திமுக எம்.எல்.ஏ.-க்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதிடுகையில், போதைப்பொருள் வணிகத்திற்குதான் தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர பேச்சு சுதந்திரத்திற்கு தடை விதிக்கவில்லை. அதனடிப்படையில் தான் குட்கா சுதந்திரமாக கிடைப்பது குறித்த பிரச்சினையை பேரவையில் எழுப்பப்பட்டது. இந்த விவகாரத்தில் உள்நோக்குடன் எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.
2-வது நோட்டீஸுக்கு இடைக்கால தடை
அனைத்து தரப்பு விசாரணைகள் முடிவடைந்த நிலையில் இன்று நீதிபதி புஷ்பா சத்யநாராயணா பிறப்பித்த இடைக்கால உத்தரவில், திமுக எம்.எல்.ஏக்களுக்கு அனுப்பப்பட்ட 2-வது உரிமை மீறல் நோட்டீஸுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுவதாக கூறினார். மேலும் இந்த வழக்கில் அக்டோபர் 28-ந் தேதிக்குள் சபாநாயகர் பதிலளிக்கவும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.