மதுரவாயல் டூ வாலாஜாபாத் வரை சாலை படுமோசம்... கடிதம் எழுதிய நீதிபதி.. சாட்டையை சுழற்றிய ஹைகோர்ட்
சென்னை: மதுரவாயல் முதல் வேலூர் மாவட்டம் வாலாஜாபாத் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையை முறையாக அமைக்கும் வரை 50 சதவீத சுங்க கட்டணத்தை மட்டும் ஏன் வசூலிக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
சென்னை மதுரவாயல் முதல் வேலூர் மாவட்டம் வாலாஜாபாத் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை மிக மோசமான நிலையில் இருப்பதாகவும், அது முறையாக பராமரிக்கப்படுவதில்லை என கூறி, நவம்பர் 22 ம் தேதி நீதிபதி சத்தியநாரயணன் தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பினார்.
இந்த கடிதத்தின் அடிப்படையில் மதுரவாயல் முதல் வேலூர் மாவட்டம் வாலாஜாபாத் வரை மீண்டும் சாலை அமைப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாரயணன் மற்றும் சேஷசாயி அடங்கிய அமர்வு, சாலை பராமரிப்பு தொடர்பாக, மத்திய சாலை போக்குவரத்து துறை, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தமிழக நெடுஞ்சாலை துறை டிசம்பர் 9 ம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டனர்.
மேலும்,மதுரவாயல் முதல் வேலூர் மாவட்டம் வாலாஜாபாத் வரை உள்ள சாலையை முறையாக அமைக்கும் வரை, 50 சதவீத சுங்க கட்டணத்தை மட்டும் ஏன் வசூலிக்க கூடாது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சென்னையில் முக்கிய பிரமுகர்கள் செல்லும் சாலைகளும் மோசமாக இருப்பதாகத் தெரிவித்தனர்.