பழங்குடியினர் ஜாதி சான்றிதழ் வழங்க மறுத்த ஆர்.டி.ஓ.வுக்கு ஹைகோர்ட் ரூ50,000 அபராதம்- கண்டனம்
சென்னை: கூர் நோக்கு குழு உத்தரவிட்டும் பழங்குடியினர் ஜாதி சான்றிதழ் வழங்காத ஆர்.டி.ஓ வுக்கு, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த சென்னை உயர்நீதிமன்றம் இதுபோன்ற அதிகாரிகளை அரசு காப்பாற்ற கூடாது என்றும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தருமபுரி மாவட்டம் சின்னகாண ஹல்லி கிராமத்தைச் சேர்ந்த ஜெயலட்சுமி, தனது குழந்தைகளுக்கு பழங்குடியினர் பிரிவு சான்றிதழ் கோரி தர்மபுரி வருவாய் கோட்டாட்சியரிடம் விண்ணப்பித்திருந்தார். அது நிராகரிக்கப்பட்டது தொடர்ந்து மாநில அளவிலான கூர் நோக்கு குழுவுக்கு அவர் விண்ணப்பித்திருந்தார்.
அந்தக் குழு அவர்களை, பழங்குடியினர் என உறுதி செய்து ஜெயலட்சுமியின் குழந்தைகளுக்கு, சான்றிதழை வழங்க உத்தரவிட்டிருந்தது . ஆனால் தொடர்ந்து பழங்குடியினர் சான்றிதழ் வழங்கப்படாததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயலட்சுமி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வினித் கோத்தாரி ஆர் சுரேஷ்குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில், இதுதொடர்பாக ஆர்.டி.ஓ விசாரணை மேற்கொண்டு உள்ளதாகவும், இரண்டு வார கால அவகாசம் வேண்டும் என தெரிவித்தார்.. இதற்கு நீதிபதிகள், மாநில கூர்நோக்குக் குழு பரிந்துரைத்த பிறகு வழங்காமல் இருப்பது ஏன்? எதற்காக மீண்டும் விசாரணை என்று கண்டனம் தெரிவித்தனர்.
"பேசாம பதுங்கு குழிக்கே போய் படுத்துக்குங்க".. பல்பு வாங்கிய டிரம்ப்.. சியாட்டில் மேயர் சுளீர்!
இதுபோன்ற அதிகாரிகளால்தான் அரசின் நற்பெயர் கெடுகிறது, இதுபோன்ற அதிகாரிகளை அரசு காப்பாற்ற நினைக்கக்கூடாது என்று அதிருப்தி தெரிவித்தனர். அத்துடன் சம்பந்தப்பட்ட ஆர்.டி.ஓ தேன்மொழிக்கு, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து அதை கொரோனா நிவாரண நிதிக்கு செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளனர். வருகிற திங்கட்கிழமை சாதி சான்றிதழோடு சம்பந்தபட்ட ஆர்டிஓ வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர். ஏற்கனவே இருந்த ஆர் டி ஓ தேன்மொழி,தற்போதைய ஆர்.டி.ஓ தணிகாசலம் மீது துறை ரீதியான நடக்க எடுக்க ஏன் பரிந்துரை செய்க்கூடாது என்பது குறித்தும் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.