பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்த தமிழக அரசின் அரசாணை.. நீக்க மறுத்த ஹைகோர்ட்
சென்னை: தமிழகத்தில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
தமிழ்நாட்டில் ஜனவரி 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்காக தமிழக அரசு அரசாணை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
50 மைக்ரான் என்ற அளவுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் கடைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதையடுத்து, பிளாஸ்டிக் தடை தொடர்பான விழிப்புணர்வு பிரசாரங்கள் மாவட்டந்தோறும் நடைபெற்று வருகிறது. பிளாஸ்டிக் பை, கப், பிளாஸ்டிக் இலை உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கும் அரசு சுற்றறிக்கை ஒன்றையும் அனுப்பி உள்ளது.
இந்நிலையில், பிளாஸ்டிக் தடை ஆணையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பிளாஸ்டிக் பைகள் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், பிளாஸ்டிக் மேலாண்மை சட்ட விதிகளின்படி, பிளாஸ்டிக் பயன்பாட்டை தடை செய்வதற்கோ, ஒழுங்குமுறை படுத்துவதற்கோ மத்திய அரசுக்கு தான் உரிமை உள்ளது. எனவே தமிழக அரசு பிறப்பித்த அரசாணை தெளிவாக இல்லை என்பதால் அந்த அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பிளாஸ்டிக் தடை விதிக்கும் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. விசாரணைக்குப் பின்னர் கோரிக்கையை ஏற்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும் மனுதாரரின் மனுவிற்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.