சட்ட விரோத தொலைபேசி இணைப்பு.. மாறன் சகோதரர்கள் மீதான குற்றச்சாட்டை ரத்து செய்ய ஹைகோர்ட் மறுப்பு!
சென்னை: சட்டவிரோத தொலைபேசி இணைப்பு வழக்கில் குற்றச்சாட்டு பதிவை ரத்து செய்ய மாறன் சகோதரர்கள் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சராக தயாநிதி மாறன் பதவி வகித்தார். அப்போது, சென்னை போட் கிளப்பில் உள்ள அவரது வீட்டில் சட்ட விரோதமாக டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் ஆரம்பித்து, அதன்மூலம் தனது சகோதரரின் சன் டிவி நிறுவனத்துக்கு உபயோகப்படுத்தி வந்ததாக குற்றச்சாட்டு கிளம்பியது.
இதனால் அரசுக்கு சுமார் 1 கோடியே 79 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிபிஐ குற்றம் சாட்டியது. மேலும் சிபிஐ அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மாறன் சகோதர்களுக்கு எதிரான இந்த வழக்கு விசாரணை சென்னை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணையின் முடிவில் கடந்த மார்ச் மாதம் மாறன் சகோதர்களை விடுவித்து அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து, சிபிஐ சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி, இந்த வழக்கில் மாறன் சகோதர்கள் மீது சிபிஐ குற்றச்சாட்டு பதிவு செய்தது. தங்கள் மீதான குற்றச்சாட்டுப் பதிவுகளை ரத்து செய்யக் கோரி தயாநிதி மாறன், கலாநிதி மாறன், கவுதமன், கண்ணன், ரவி ஆகியோர் சார்பில் சென்னை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டன.
அமைச்சருக்கு தொலைபேசி இணைப்புக்கான உச்சவரம்பு என்று எதையும் விதிமுறை குறிப்பிடப்படவில்லை என்றும், எனவே தங்கள் மீது பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய வேண்டும் என்றும், மாறன் தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜெகதீஷ் சந்திரா, வழக்கின் தீர்ப்பை இன்று வழங்கினார்.
அதில், சட்ட விரோத தொலைபேசி இணைப்புகள் பெற்றது தொடர்பாக சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டு பதிவுகளை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், புதிதாக குற்றச்சாட்டை பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளவும் சிபிஐ நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.