ரஜினிகாந்த் மீது சினிமா பைனான்சியர் தொடர்ந்த அவதூறு வழக்கு ரத்து.. சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் மீது சினிமா பைனான்சியர் போத்ரா தொடர்ந்த அவதூறு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
நடிகர் தனுஷின் தந்தையும், பிரபல தயாரிப்பாளர், இயக்குநருமான கஸ்தூரி ராஜா மீது சினிமா பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ரா, 65 லட்சம் ரூபாய் செக் மோசடி வழக்கு தொடர்ந்திருந்தார்.
மேலும், தான் பணம் தரவில்லை என்றால் தமது உறவினர் நடிகர் ரஜினிகாந்த் பணத்தை திருப்பி தருவார் என்று கஸ்தூரிராஜா தெரிவித்திருந்தாக போத்ரா நீதி மன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கடனை திருப்பி செலுத்தாத கஸ்தூரி ராஜா மீது தன்னுடைய பெயரை தவறாக பயன்படுத்தியதாக நடவடிக்கை எடுக்க ரஜினிகாந்துக்கு உத்தரவிட வேண்டும் என்று புதிய மனு ஒன்றையும் தாக்கல் செய்திருந்தார்.
இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்திருந்த நடிகர் ரஜினிகாந்த், பணம் பறிப்பதற்காக போத்ரா இந்த வழக்கை தொடர்ந்துள்ளதாக கூறியிருந்தார். இதையடுத்து, ரஜினிக்கு எதிராக போத்ரா சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
அதில் போத்ரா, நான் ரஜினியிடம் எந்த சூழ்நிலையிலும் பணம் கேட்காத நிலையில் பணம் வாங்கியதாக கூறுவது தமக்கு எதிரான அவதூறு கருத்தாகும். எனவே அவர் மீது அவதூறு சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டிருந்தார்.
இந்த அவதூறு வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று ரஜினிகாந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார். அதில், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்கை நிராகரிக்க கோரிய மனுவில் தெரிவித்த கருத்தின் அடிப்படையில் அவதூறு வழக்கு தொடர முடியாது என முறையிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ரஜினி மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு ஏற்கெனவே இடைக்கால தடை விதித்திருந்தது. இந்த வழக்கில் பிரதான மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த வெங்கடேசன், ரஜினிகாந்த் மீது சினிமா பைனான்சியர் போத்ரா தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்து இன்று உத்தரவிட்டுள்ளார்.