முந்திரி ஆலைத் தொழிலாளி மர்ம மரணம்.. கடலூர் திமுக எம்.பி-க்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு
சென்னை: கடலூரில் முந்திரி நிறுவன தொழிலாளி மர்ம மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரியும், உடலை ஜிப்மர் மருத்துவர்கள் மூலம் பிரேதப் பரிசோதனை செய்யக் கோரியும் தொடரப்பட்ட வழக்கைச் சென்னை உயர் நீதிமன்றம் நாளை விசாரிக்கிறது.
கடலூர் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த பணிக்கன்குப்பம் பகுதியில் திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.வி.ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஏற்றுமதி நிறுவனம் உள்ளது.
வெறும் 24 மணி நேரம்தான்.. சென்னையில் கடத்தப்பட்ட 3 வயது சிறுவன் நாக்பூரில் மீட்பு!
இந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த மேல்மாம்பட்டு என்ற ஊரைச் சேர்ந்த தொழிலாளர் கோவிந்தராசு மர்மமான முறையில் உயிரிழந்தார்.
மகன் வழக்கு
இந்நிலையில் இவரது மரணம் கொலை எனவும், இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் மற்றும் அவரது நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் தான் காரணம் எனக் கூறி, அவரின் மகன் செந்தில்வேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் செப்டம்பர் 19ஆம் தேதி வேலைக்குச் சென்ற தனது தந்தை வீடு திரும்பவில்லை எனவும் அங்கு அவர் விஷம் குடித்ததாக தனக்கு போன் மூலமாகத் தகவல் வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
கொலை
மேலும், தகவல் கிடைத்ததும் மருத்துவமனைக்குச் சென்று பார்த்தபோது தந்தையின் உடலில் பல ரத்த காயங்கள் மற்றும் அடித்துத் துன்புறுத்திய அடையாளங்கள் இருந்ததாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். தனது தந்தை கொலை செய்யப்பட்டிருப்பதாகவும், இதற்கு நிறுவன உரிமையாளரான, திமுக எம்.பி. ரமேஷ் தான் காரணம் எனவும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் தன் தந்தையின் மரணத்தை உரிய முறையில் காடாம்புலியூர் காவல் நிலையத்தினர் முறையாக விசாரிக்கவில்லை என்பதாலும், மரணத்தில் சந்தேகம் இருப்பதாலும் உடலைப் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்களைக் கொண்டு பிரேதப் பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.
சிபிஐ விசாரணை
காடாம்புலியூர் காவல் நிலைய வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் எனப் பிரதான கோரிக்கையும் வைத்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன்பு அவசர வழக்காக இன்று மாலை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது ஆஜரான அரசு வழக்கறிஞர், மரணமடைந்த கோவிந்தராசுவின் உடல் தற்போது விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருப்பதாகவும், அங்குள்ள மூன்று மருத்துவர்கள் மூலம் பிரேதப் பரிசோதனை செய்யவும், அதனை வீடியோ பதிவு செய்யத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
நாளை விசாரணை
அப்போது நீதிபதி மனுதாரர் விரும்பினால் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் இருந்து ஒரு மருத்துவரை அனுமதிப்பதாகவும் தெரிவித்தார். ஆனால் மனுதாரர் தரப்பில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில், அதன் மருத்துவர்களைக் கொண்டுதான் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதனை அடுத்து வழக்கை நாளை விசாரிப்பதாகக் கூறி வழக்கு விசாரணையை நீதிபதி தள்ளிவைத்துள்ளார்.