தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை தாமதம்- மத்திய அரசின் போக்கு வருத்தமளிக்கிறது: ஹைகோர்ட் மதுரை கிளை
சென்னை: தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க விரைவாக நடவடிக்கை எடுக்காத மத்திய அரசின் போக்கு வருத்தம் அளிப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
Recommended Video
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டுவிட்டது. ஆனால் மருத்துவமனை அமைப்பதற்கான எந்த ஒரு பணியும் தொடங்கவே இல்லை. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், மக்கள் இயக்கங்கள் கடும் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றன.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. இந்த விசாரணையின் தொடக்கத்தில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதில் தமிழக அரசுக்கு விருப்பம் இல்லையா? நிலம் கையகப்படுத்தி ஒப்படைப்பதில் பிரச்சனை என தகவல்கள் வந்துள்ளனவே என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
பின்னர் அரசு தரப்பில் பதில் தர அவகாசம் கேட்கப்பட்டது. இதனை நீதிபதிகளும் ஏற்றுக் கொண்டனர். இதனையடுத்து நடைபெற்ற விசாரணயின் போது, எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு தமிழக அரசு ஏற்கனவே 200 ஏக்கர் நிலத்தை ஒப்படைத்துவிட்டது. கூடுதலாக 22 ஏக்கர் நிலத்தை மத்திய அரசு கேட்டது. அதனையும் கொடுத்துவிட்டோம் என தமிழக அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டது.
அடுத்த சிக்கல்.. தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயங்கும் மக்கள்.. எய்ம்ஸ் டாக்டர்கள் கவலை
மத்திய அரசு தரப்பிலோ, எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஜப்பானிடம் கடன் கேட்கப்பட்டுள்ளது. கடன் வாங்குதல் மற்றும் ஒப்பந்த பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் 31-ந் தேதிக்குள் ஒப்படைக்கப்பட்டுவிடும். அந்த ஒப்பந்த பணிகள் முடிந்த பின்னர் 45 மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் நீதிபதிகளோ, எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பான மத்திய அரசின் போக்கு வருத்தம் தருகிறது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிலம் தரவில்லை என்பது போன்ற தவறான தகவல்களை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கொடுத்தவர்கள் யார்? அவர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிருப்தியை வெளியிட்டனர்.