அழகர் கோவில்: ஆடி அமாவாசை கருடவாகனத்தில் எழுந்தருளும் பெருமாள் - பக்தர்களுக்கு அனுமதியில்லை
மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயில் ஆடி அமாவாசை மற்றும் பிரமோற்சவ உற்சவம் பக்தர்கள், உபயதாரர்களின்றி நடக்கும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது
சென்னை: ஆடி அமாவாசையின் போது அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் தேரோடும் வீதிகளில் எழுந்தருள்வார். பதினெட்டாம்படி கருப்பணசுவாமி சன்னதி கதவிற்கு சந்தனம் சாத்து உபயதாரர் மூலம் நடக்கும். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் லாக் டவுன் அறிவிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள், உபயதாரர்களின்றி விழாக்கள் நடைபெறும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது
அழகர்கோவிலில் ஆடி மாதம் பத்துநாட்கள் நடக்கும் பிரமோற்ஸவம் கொடியேற்றத்துடன் துவங்கி தினமும் காலை, மாலை சுவாமி பல வாகனங்களில் எழுந்தருளல் நடக்கும். லாக்டவுன் காலமாக இருப்பதால் இந்தாண்டு ஜூலை 20 ஆடிஅமாவாசை கருட வாகன புறப்பாடு கோயில் உட்பிரகாரத்தில் தெற்குபக்கம் வழக்கம் போல் நடக்கும். பக்தர்கள், உபயதாரர்களுக்கு அனுமதியில்லை என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அழகர் கோவிலில் ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 4 வரை பிரமோற்சவம் நடைபெற உள்ளது. ஜூலை 25 வழக்கம்போல அங்குரார்பணம் தொடர்பான பூஜைகள் நடக்கும். 26ஆம் தேதி கொடியேற்றம், 26ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை காலை, மாலையில் சுவாமி எழுந்தருளுதல் நடைபெறும்.
திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர், சொரிமுத்து ஐயனார் கோவில்களில் ஆடி அமாவாசை விழா ரத்து
ஜூலை 20 ஆடி அமாவாசை, ஆகஸ்ட் 3ஆம் தேதி ஆடி பவுர்ணமியில் பதினெட்டாம்படி கருப்பணசுவாமி சன்னதி கதவுகளுக்கு சந்தனம் சாத்துபடி கோயில் சார்பில் நடத்தப்படும். இக்கோயிலில் ஆடி அமாவாசையின் போது சுந்தரராஜ பெருமாள் தேரோடும் வீதிகளில் எழுந்தருள்வார்.
ஆகஸ்ட் 3ஆம் தேதி நடக்க வேண்டிய தேரோட்டம் ஆகஸ்ட்1ஆம் தேதிக்குப் பிறகு அரசால் எடுக்கப்படும் முடிவுகளுக்கு ஏற்ப முடிவு செய்யப்படும் என கோயில் உதவி கமிஷனர் அனிதா தெரிவித்துள்ளார்.