மதுரையில் எங்கள் எய்ம்ஸ் எங்கே?.. "ஒற்றை செங்கல்" விவகாரத்தை கையில் எடுத்த சு.வெங்கடேசன் எம்பி
260 மருத்துவ கல்லூரிகளை திறந்ததாக சொல்கிறீர்களே மதுரையில் எங்கள் எய்ம்ஸ் எங்கே என மதுரை எம்பி கேள்வி
சென்னை: மதுரையில் எங்கள் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே என மதுரை எம்பி சு. வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என 2015 ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடந்த பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்தது. அதன்படி 2018ஆம் ஜூன் மாதம் மதுரை தோப்பூரில் இடம் தேர்வு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து 6 மாதங்கள் கழித்து மத்திய அமைச்சரவை அந்த இடத்திற்கு ஒப்புதல் வழங்கியது. 2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிய வேளையில் 27.01. 2019ஆம் ஆண்டு மதுரை எய்ம்ஸுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்தியில் பேசு- நடிகர் சித்தார்த்தை சீண்டிய மதுரை CISF வீரர்-விசாரிக்க வெங்கடேசன் எம்பி கோரிக்கை
இரண்டே கால் ஆண்டுகள்
அடிக்கல் நாட்டி இரண்டே கால் ஆண்டுகளுக்கு பிறகு 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கடன் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. கடன் ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் பணி தொடங்கும் என கூறப்பட்ட நிலையில் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக மதுரையில் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்கப்படவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் தொடங்கப்படாததால் அந்த கல்லூரியில் சேர்ந்த மாணவர்களுக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் வகுப்புகள் நடைபெற்று வந்தது.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி 2019 இல் மதுரை எய்ம்ஸுக்கு அடிக்கல் நாட்டும் போது 45 மாதங்களில் கட்டி முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இது வரை கட்டுமான பணிகள் மேற்கொள்ளவில்லை. இது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக கேட்ட போது கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும் என தகவல்கள் இல்லை. ஆனால் அக்டோபர் 2026 ஆம் ஆண்டு மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மதுரை எய்ம்ஸ் கட்டுமானம்
மதுரை எய்ம்ஸ் கட்டுமானத்திற்கு ரூ 1977.8 கோடியில் 1627.7 கோடி ஜப்பானை சேர்ந்த ஜெய்க்கா நிறுவனம் வழங்குகிறது. 20 சதவீத தொகை ரூ 350 கோடியை மத்திய அரசு பட்ஜெட் ஒதுக்கீட்டில் வழங்கும். இந்தியாவில் மற்ற நகரங்களில் அமைக்கப்படும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அரசே நிதி வழங்கும் போது தமிழகத்தில் அமைக்கப்படும் எய்ம்ஸுக்கு மட்டும் ஜப்பான் நிதியுதவி ஏன் என்ற கேள்வி எழுந்தது.
எய்ம்ஸ் மருத்துவமனை
மேலும் இந்த எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் தோப்பூரில் எம்பிக்கள் சு. வெங்கடேசனும், மாணிக்கம் தாகூரும் நேரில் போய் களநிலவரத்தை பார்த்து சமூகவலைதளத்தில் பதிவிட்டிருந்தனர். இந்த நிலையில் இன்றைய தினம் மத்திய பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. அதில் மத்திய அரசின் நலத்திட்டங்கள், 4 ஆண்டு கால சாதனைகள் குறித்து உரையில் இடம்பெற்றிருந்தது.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை
அந்த வகையில் பிரதமர் மோடியின் 8 ஆண்டுகால ஆட்சியில் 260 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கியுள்ளதாக குடியரசு தலைவர் தனது உரையில் தெரிவித்துள்ளார். இதை குறிப்பிட்டு மதுரை எம்பி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து மதுரை எம்பி வெங்கடேசன் தனது ட்விட்டரில் கூறுகையில் 2014 முதல் 2022 வரை மோடியின் எட்டாண்டு கால ஆட்சியில் 260 மருத்துவக்கல்லூரிகளை துவக்கியுள்ளதாக குடியரசுத்தலைவர் தனது உரையில் தெரிவித்தார். மதுரையில் எங்கள் எய்ம்ஸ் எங்கே? என சு வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.