புறநகர் ரயில்களுக்கு பதில் லாபம்தரும் வண்டிகளை தான் இயக்குவீங்க?மத்திய அரசுக்கு சு.வெங்கடேசன் கேள்வி
சென்னை: புறநகர் ரயில்களை இயக்காமல் லாபம் தரும் ரயில்களைத்தான் மத்திய அரசு இயக்குமா? என்று லோக்சபா எம்.பி. சு. வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக சு.வெங்கடேசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசின் சார்பில் செப்டம்பர் இரண்டாம் தேதியே சென்னையில் புறநகர் மின்சார ரயில்களை இயக்க அனுமதி வழங்கி தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கும் ரயில்வே அமைச்சகத்துக்கும் கடிதம் எழுதியிருப்பதாக முதல்வரின் அறிக்கை கூறுகிறது. அப்படி இருக்க ரயில்வே அமைச்சகம் இன்னமும் மின்சார புறநகர ரயில்களை இயக்க அனுமதி வழங்காதது ஆச்சரியமளிக்கிறது.
விவசாயிகள், சிறு வர்த்தகர்களின் முதுகெலும்பையே முறித்துவிட்ட மோடி-நிதிஷ்குமார்... ராகுல் தாக்கு
மாநிலங்கள் மீது புகார்
மற்ற ரயில்களை இயக்க அனுமதி மறுத்து வந்தது மாநில அரசுதான். மாநில அரசு அனுமதிக்காததால் தான் நாங்கள் ரயில் இயக்கவில்லை என்று ரயில்வே அமைச்சகம் முன்பு கூறியது.
2 மாத தாமதம் ஏன்?
ஆனால் மாநில அரசு அனுமதி அளித்த பின்பும் இரண்டு மாதங்களாக ரயில்வே அமைச்சகம் இதன் மீது முடிவு எடுக்காதது ஏன் என்று மக்களுக்கு ரயில்வே அமைச்சகம் விளக்க வேண்டும். எனக்கு கிடைத்த தகவலின் படி ரயில்வே அமைச்சகம் எப்போது மற்ற பயணி சிறப்பு வண்டிகளில் முன்பதிவில்லா பொது பெட்டிகளை இணைக்கிறோமோ அப்போதுதான் புறநகர ரயில்களை இயக்க முடியும் என்று கூறிவிட்டதாக தெரிகிறது.
முடிவெடுக்காதது கண்டனத்துக்குரியது
இதைப் பற்றி கவலைப்பட வேண்டியது மாநில அரசுதான். மாநில அரசே அனுமதி வழங்கியபின் இதை முடிவெடுக்காமல் புறக்கணிப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. ஏற்கனவே மக்கள் தங்கள் வேலை இடங்களுக்கு வந்து செல்ல நெருக்கடியான பேருந்துகளையும் அல்லது அதிக கட்டணம் கொடுத்து தனியார் வண்டிகளையும் பயன்படுத்தி வருகிறார்கள்.
லாபம் தந்தால்தான் இயக்கப்படுமா?
தொழிலகங்களும் அலுவலகங்களும் 100 சதம் திறந்த பிறகு இன்னமும் அவர்களின் பொது போக்குவரத்தை நிறுத்தி வைத்திருப்பது கேள்விக்குரியதாகும். ரயில்வே அமைச்சகம் இப்போது நடந்து கொள்வதை வைத்துப் பார்த்தால் லாபமீட்டும் வண்டிகளை மட்டும் இயக்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.
புறநகர் ரயில்களை இயக்க வேண்டும்
புறநகர் ரயில்கள் வெகு மக்கள் பயன்பாட்டு ரயில்கள் ஆகும். தேச நலனின் அடிப்படையில் பார்த்து இந்த வண்டிகளை இயக்கவேண்டும். மும்பை புறநகர ரயில்களை அதிகம் இயக்கிட அனுமதி வழங்கப்படுவதாக தெரிகிறது. ரயில்வே அமைச்சகம் மக்கள் நலனில் அக்கறை கொண்டு புறநகர் மின்சார ரயில்களை இயக்குவதற்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.