உ.பி-இல் தேர்வானவர்களை எப்படி தமிழகத்தில் நியமிக்கலாம்? இந்தியன் ரயில்வேயை சாடிய சு வெங்கடேசன்
சென்னை: உத்தரப் பிரதேசத்தில் தேர்வு செய்யப்பட்டவர்களைச் சென்னையில் நியமித்து, சென்னையில் தேர்வு செய்யப்பட்டவர்களைக் காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ள முடிவை இந்திய ரயில்வே திரும்பப் பிறவிலை என்றால் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று மதுரை எம்பி சு. வெங்கடேசன் சாடியுள்ளார்
கடந்த 2018ஆம் ஆண்டு ரயில்வே வாரிய உதவி ரயில் ஓட்டுனர் காலியிடங்கள் மற்றும் டெக்னீசியன் காலியிடங்களை நிரப்புவது குறித்து அறிவிப்பு வெளியானது. இதில் வட மாநிலத்தவர்களும் தேர்வு எழுதியுள்ளனர்.
இதில் உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூர் ரயில்வே தேர்வு வாரியத்தில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தெற்கு ரயில்வே-இல் பணி அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியன் ரயில்வே
அதிலும் குறிப்பாக தெற்கு ரயில்வே தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டவர்கள் காத்திருக்கும் நிலையில், அவர்களைக் காட்டிலும் குறைவான மதிப்பெண் பெற்ற உ.பி. மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு தெற்கு ரயில்வே-இல் பணி வழங்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரயில்வே துறையின் இந்த நடவடிக்கையை மதுரை எம்பி சு. வெங்கடேசன் கடுமையாகச் சாடியுள்ளார்.
சு வெங்கடேசன் அறிக்கை
இது குறித்து சு வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உத்தரப் பிரதேசத்தில் கோரக்பூர் ரயில்வே தேர்வு வாரியத்தில் தேர்வு செய்யப்பட்ட 54 விண்ணப்பதாரர்களை தெற்கு ரயில்வே பணிகளுக்கு நியமித்து, தெற்கு ரயில்வே-இன் சென்னை தேர்வு வாரியத்தில் தேர்வு செய்யப்பட்டுக் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களைப் புறக்கணித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இது மிகவும் கண்டனத்துக்குறியது. உடனடியாக இந்த உத்தரவைத் திரும்பப் பெறவேண்டும்.
ரயில்வே காலியிடங்கள்
சென்னை தேர்வு வாரியத்தின் காத்திருப்போர் பட்டியலில் உள்ள விண்ணப்பதாரர்களை அந்த காலி இடங்களுக்கு நியமிக்க வேண்டும் என்று தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கும் கடிதம் எழுதி உள்ளேன். 2018இல் ரயில்வே வாரியம் உதவி ரயில் ஓட்டுனர் காலியிடங்களுக்கும் டெக்னீசியன் காலியிடங்களுக்கும் விண்ணப்பங்கள் கோரியிருந்தது. தெற்கு ரயில்வே-இல் 761 உதவி ரயில் ஓட்டுநர் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரி இருந்தது. விண்ணப்பதாரர்கள் ஒரு ரயில்வே-க்கு தான் விண்ணப்பிக்க முடியும். அவர்கள் எந்த மொழியில் வேண்டுமானாலும் தேர்வு எழுதலாம் என அறிவிக்கப்பட்டது.
எப்படி நியமிக்கலாம்
எந்த ரயில்வே-க்கு தேர்வு எழுதுகிறார்களோ அந்த ரயில்வே-க்கு தான் அவர்கள் நியமிக்கப்பட வேண்டும். வேறு ரயில்வே-க்கு அவர்கள் நியமிக்கப்படக் கூடாது. ஆனால் உத்தரப் பிரதேசத்திலுள்ள கோரக்பூர் ரயில்வே தேர்வு வாரியத்தில் தேர்வு செய்யப்பட்ட 54 பேரை தெற்கு ரயில்வே-இல் உள்ள 51 இடங்களில் நிரப்பிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களின் மதிப்பெண்கள் தெற்கு ரயில்வே-இல் காத்திருப்போர் பட்டியலில் உள்ள விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்களை விடக் குறைவானதாகும். அதுமட்டுமல்ல இதர ரயில்வே-இல் தேர்வு செய்த பட்டவர்களை தெற்கு ரயில்வே-இல் நியமிப்பது சட்ட விரோதமாகும்.