மதுரையில் வாக்குப்பதிவு இயந்திர அறைக்குள் நுழைந்த தாசில்தார் சஸ்பெண்ட்.. தேர்தல் ஆணையம் அதிரடி
சென்னை: மதுரையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்குள் அனுமதியின்றி நுழைந்த தாசில்தார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
லோக்சபா தேர்தலின் இரண்டாவது கட்டமாக தமிழகத்தில் உள்ள 38 எட்டு தொகுதிகளுக்கு கடந்த 18ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
மதுரையில் பதிவான வாக்குகள், மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள அறைகளில் பத்திரமாக பூட்டி வைக்கப்பட்டுள்ளது. துணை ராணுவம் மற்றும் காவல் துறையினர் மூன்றடுக்கு பாதுகாப்பு இந்த அறைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சம்பவத்தன்று நள்ளிரவில், பெண் தாசில்தார் சம்பூர்ணம் அந்த அறைக்குள் நுழைந்து, சுமார் இரண்டு மணி நேரம், இருந்ததாகவும் அதன் பிறகு சில ஆவணங்களை எடுத்துச் சென்றதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதையொட்டி, எதிர்க் கட்சி வேட்பாளர்கள், நேற்று நள்ளிரவு வரை வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு எதிரே தர்ணா போராட்டம் நடத்தினர். அவர்கள் கோரிக்கையை ஏற்று, அங்கு பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சிகளை போட்டு பார்த்ததில், தாசில்தார் சம்பூரணம் சுமார் 2 மணி நேரம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்குள் இருந்தது உறுதியானது.
அதிமுக மற்றும் மோடி ஆட்சியில் தேர்தல் ஜனநாயகத்தை காப்பாற்ற வழியே இல்லை.. ஸ்டாலின் ஆவேசம்
வெளியே செல்லும்போது சில ஆவணங்களை சம்பூரணம், கையில் எடுத்துச் சென்றதாகவும், காட்சிகள் பதிவாகி உள்ளது. இந்த நிலையில் தாசில்தார் சம்பூரணம் சஸ்பெண்ட் செய்யப் படுவதாக சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்த தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், மேலும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் அதிகாரி அத்துமீறி நுழைந்தது பற்றி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு உள்ளதாகவும் அவர் கூறினார்.