மதுரை, தூத்துக்குடி, நெல்லையில் கொட்டித்தீர்த்த அதிகனமழை... தேங்கி நிற்கும் வெள்ளத்தால் தவிக்கும் மக்கள்
தமிழகம் முழுவதும் கனமழை கொட்டித்தீர்த்துள்ளது. தென்மாவட்டங்களில் விடாமல் கொட்டித்தீர்த்த அதிகனமழையால் எங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
சென்னை: வளிமண்டல மேலடுக்குக்சுழற்சியால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்துள்ளது. மதுரை, நெல்லை, தூத்துக்குடியில் கொட்டித்தீர்த்த கனமழையால் எங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.
தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த 7ஆம் தேதி முதலே பல மாவட்டங்களில் அதிகனமழையாக கொட்டித்தீர்க்கிறது. அணைகள், ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிகின்றன. உபரி நீர் திறந்து விடப்படுவதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளநீர் வீடுகளுக்குள்ளும் புகுந்துள்ளது. பல ஊர்களில் ஆற்றங்கரையோரம் இருந்த வீடுகள் அடித்துச்செல்லப்பட்டு விட்டன. மக்கள் உடமைகளை இழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியால் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. வானிலை மையம் கணித்தது போலவே தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று காலை முதலே கனமழை கொட்டித்தீர்த்தது. இதில் அதிகபட்சமாக நேற்று காலை முதல் தற்போது வரை தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 30 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இதுவே தென் தமிழகத்தில் இந்த ஆண்டு பதிவான அதிகபட்ச மழை அளவாகும். தூத்துக்குடி, 26 செ.மீ, திருச்செந்தூர் 24 செ.மீ மழை பெய்துள்ளது.
71வது இந்திய அரசியலமைப்பு நாள்.. இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை
வீடுகளுக்குள் வெள்ளநீர்
காயல்பட்டினத்தில் நேற்று காலையில் இருந்து இன்று காலை 6 மணி வரை 24 மணி நேரத்தில் 306 மிமீ மழை பெய்துள்ளது. இது அங்கு பெய்த மிக அதிக மழையாகும். இதனால் காயல்பட்டினம் முழுவதும் சாலைகளில் தண்ணீர் தேங்கி வெள்ளம் போன்று காட்சி அளிக்கிறது. வீதிகளில் தேங்கியுள்ள வெள்ளநீர் வீடுகளுக்குள்ளும், கடைகளுக்குள்ளும் புகுந்துள்ளது. தாழ்வான பகுதிகள் மட்டுமல்லாது எங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.
மக்கள் தவிப்பு
திருச்செந்தூரில் 8 மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டித்தீர்த்தது. புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் உள்பிரகாரம் மற்றும் வெளி பிரகாரங்களில் மழைநீர் தேங்கியது. வெளி பிரகாரங்களில் முழங்காலளவு தேங்கிய மழைநீரால் பக்தர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். திருச்செந்தூரில் உள்ள ஜீவா நகர், சன்னதி தெரு, வீரராகவபுரம் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மழைநீருடன் கழிவு நீரும் வீடுகளுக்குள் புகுந்தது. கனமழை காரணமாக பாதுகாப்பு கருதி திருச்செந்தூர் முழுவதும் மின்விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
தண்டவாளத்தில் தண்ணீர்
தூத்துக்குடி நகரில் பலத்த மழையால் பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தூத்துக்குடி பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையமும் இதிலிருந்து தப்பவில்லை. ரயில் நிலையத்தில் மழைநீர் தேங்கி தண்டவாளங்களை மூழ்கடித்தது. தூத்துக்குடியில் இருந்து வழக்கமாக 8.15 மணிக்கு சென்னைக்கு செல்லக்கூடிய முத்து நகர் எக்ஸ்பிரஸ் அதிகாலை 3.15 மணிக்கும் புறப்பட்டு சென்றது. மழைத் தண்ணீரை அகற்ற காலதாமதம் ஆகியதால், மைசூர் ரயில் இரவு 11.45 மணிக்கும் புறப்பட்டு சென்றது. மழையினால் பொதுமக்கள் பலரும் அவதிப்பட்டுவருகின்றனர்.
தாமிரபரணியில் வெள்ளம்
திருநெல்வேலி மாவட்டத்தில் விடாமல் பெய்த அதிகனமழையால் எங்கும் பெருவெள்ளம் சூழ்ந்துள்ளது. திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை 7 மணியிலிருந்து சாரல் மழை தொடங்கியது. காலை 10 மணிக்குமேல் அதிகனமழையாக கொட்டித்தீர்த்தது. திருநெல்வேலி மாநகர பகுதிகள் மட்டுமின்றி மாவட்டத்தின் பிறபகுதிகளிலும் கனமழை இரவிலும் நீடித்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் குளம்போல் தண்ணீர் தேங்கியுள்ளது. சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றங்கரையோரம் வசிப்பவர்களின் வீடுகளுக்குள் தண்ணீர் தேங்கியுள்ளது.
Recommended Video
குளமான சாலைகள்
மதுரை மாவட்டத்தில் பிற்பகல் முதலே அதிகனமழை பெய்தது 5 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் தேங்கியுள்ளது. பேருந்து நிலையங்களில் சுரங்கப்பாதைகளை வெள்ளநீர் மூழ்கடித்துள்ளது. சாலைகளில் குளம் போல வெள்ளம் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.