மதுரை,விருதுநகர் நெல்லையில் டிச.4 முதல் மீண்டும் கனமழை - எதிர்கொள்ள தயாராகுங்கள்
தென் மாவட்டங்களில் டிசம்பர் 4ஆம் தேதி முதல் மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் மழை சற்றே ஓய்ந்துள்ள நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக டிசம்பர் 4 ஆம் தேதி முதல் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இன்றும் நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது.
Recommended Video
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை நவம்பர் மாதத்தில் இயல்பை விட அதிகமாகவே பெய்துள்ளது. நவம்பர் மாதத்தில் 1901ஆம் ஆண்டை விட அதிகமாக கொட்டித்தீர்த்துள்ளது. டிசம்பர் மாதத்தில் கூடுதலாக மழை பொழிவு இருக்கும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.
டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரையில் ஆந்திர பிரதேச கடலோர பகுதிகள், தெற்கு கர்நாடகா, தமிழ்நாடு, புதுவை மற்றும் கேரளா ஆகிய இடங்களில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
டிசம்பர் மாதத்தில் இயல்பை விட அதிகமாக 132 சதவிகிதம் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.
இவ்வளவு கோடியா! அடையாளம் தந்த இர்பான் பதான்.. ஐபிஎல் உலகில் 2 இளம் காஷ்மீர் வீரர்கள் செய்த சாதனை!
மிதமான மழை
இந்த நிலையில் வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், வெப்பச்சலனம் காரணமாக இன்றும் நாளையும் தென் மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கனமழை வெள்ளம்
டிசம்பர் 4ஆம் தேதியன்று மத்திய வங்கக் கடல், அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவ உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, மதுரை, விருதுநகர் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
கனமழை நீடிக்கும்
டிசம்பர் 5ஆம் தேதியன்று நீலகிரி, கோயம்புத்தூர், சேலம், தர்மபுரி, ஈரோடு, தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
இடி மின்னலுடன் கனமழை
6 ஆம் தேதியன்று நீலகிரி, கோயம்புத்தூர், நாமக்கல், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
சென்னை நிலவரம்
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு. வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 6 செமீ மழை பதிவாகியுள்ளது. தஞ்சாவூர் 5, ஆவுடையார்கோயில் (புதுக்கோட்டை), வீரபாண்டி (தேனி) தலா 4 செமீ மழை பதிவாகியுள்ளது. , சோத்துப்பாறை (தேனி), பர்லியார் (நீலகிரி) தலா 3, ஆண்டிபட்டி (மதுரை) மழை பதிவாகியுள்ளது.
புயலாக மாறும்
தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதனைத் தொடர்ந்து 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று மத்திய வங்கக் கடல் பகுதிக்கு நகரக் கூடும். இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா தெற்கு ஒரிசா கரையை வரும் 4 ஆம் தேதி காலை நெருங்க கூடும். இதன் காரணமாக இன்றைய தினம் தென்கிழக்கு வங்க கடல் பகுதி மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
பலத்த சூறாவளி காற்று
நாளைய தினம் மத்திய வங்கக் கடல் பகுதி மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதி , வடக்கு ஆந்திரா மற்றும் ஒரிசா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நாளை மறுநாள் மத்திய வங்கக் கடல் பகுதி மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதி , ஆந்திரா மற்றும் ஒரிசா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மீனவர்கள் கவனம்
5ஆம் தேதி மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு வங்கக் கடல் பகுதி, வடக்கு ஆந்திரா மற்றும் ஓடிசா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.