மகாபலிபுரத்தை 3 நாளில் சிங்கப்பூர் போல மாற்றிவிட்டார்கள்.. விக்கிரவாண்டியில் கிண்டல் செய்த ஸ்டாலின்!
விழுப்புரம்: பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகைக்காக மகாபலிபுரத்தை 3 நாட்களில் சிங்கப்பூர் போல மாற்றிவிட்டார்கள் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகம் மீண்டும் இன்னொரு இடைத்தேர்தல் களத்திற்கு தயாராகிவிட்டது. வேலூர் லோக்சபா தேர்தலுக்கு பிறகு தற்போது மீண்டும் தமிழகத்தில் இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. அதன்படி தமிழகத்தில் நாங்குநேரி விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தோ்தல் வரும் அக்டோபர் மாதம் 21ம் தேதி நடைபெறுகிறது.
இந்த நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் புகழேந்திக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.
என்ன பேசினார்
அப்போது, பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையை சுட்டிக்காட்டி பேசினார். அதில் மாமல்லபுரம் இப்போது, தூய்மை நகரமாகி விட்டது. இந்த பணியை செய்வதற்காக அரசு இயந்திரம் தீவிரமாக வேகமாக இயங்கி உள்ளது. வெளிநாட்டு பிரதமர் வருகிறார் என்று இப்படி செய்கிறார்கள்.
பிரச்சாரம் செய்தார்
மகாபலிரத்தை 3 நாட்களில் சிங்கப்பூர் போல மாற்றிவிட்டார்கள். மாநகராட்சி, உள்ளாட்சி, நகராட்சி இதெல்லாம் செய்திருக்க வேண்டும். அவர்கள் செய்யும் வேலை இதுதான். இப்போது சீன பிரதமர் வருகிறார் என்று இப்படி தமிழக அரசே வேகமாக அந்த பணிகளை செய்துள்ளது. இல்லையென்றால் அவர்கள் தமிழகத்தில் எங்கும் இப்படியெல்லாம் சுத்தம் செய்திருக்க மாட்டார்கள்.
உள்ளாட்சி தேர்தல்
உள்ளாட்சி தேர்தல் நடந்து இருந்தால் அவர்களே இந்த பணிகளை செய்திருப்பார்கள். உள்ளாட்சி , நகராட்சி நிர்வாகம் செய்ய வேண்டிய பணிகள் இது. ஆனால் 8 வருடமாக தேர்தல் நடக்கவில்லை. அதனால் அந்த பணிகள் எதுவும் செய்யப்படாமல் அப்படியே முடக்கப்பட்டுள்ளது.
திமுக எப்படி
திமுக ஆட்சிக்கு வந்ததும், உள்ளாட்சி தேர்தல் நிச்சயம் நடத்தப்படும். அதன் மூலம் உங்கள் கிராமங்கள் எல்லாம் மீண்டும் பொலிவு பெறும். விரைவில் இதற்கான முன்னெடுப்புகளை திமுக எடுக்கும் என்று மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டார்.