மகளிர் லோன்... மைக்ரோ பைனான்ஸ்களிடம் சீரழிந்து வரும் மகளிர் சுயஉதவிக்குழுக்கள்.. பகீர் தகவல்
சென்னை: தமிழகம் முழுவதும் மகளிர் சுயஉதவிக்குழுவிற்கு மைக்ரோ பைனான்ஸ் என்ற பெயரை போலியாக வைத்துக்கொண்டு பலர் கடன் சேவைகளில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. குறைந்த வட்டிக்கு கடன் பெயரில், ஆசைப்பட்டு கடன் வாங்கி பெண்கள் அதில் இருந்து மீளமுடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.
மதுரை, திருச்சி,தேனி, திண்டுக்கல், கோவை, நெல்லை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம் என தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் புற்றீசல் போல் பெருகி கிடக்கிறது
மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள். இவற்றில் பல முறையான அனுமதியுடன் செயல்படுபவை அல்ல. இந்த நிறுவனங்களின் நோக்கம் மகளிர் சுயஉதவிக்குழுக்களை தேடி பிடித்து கடன் கொடுத்து கந்துவட்டி வசூலிப்பது தான்.
மொழியைக் காக்க இன்றும் கொதிக்கும் தமிழகம்.. பேரறிஞர் அண்ணா அப்படி என்ன பேசினார்..!
12500 ரூபாய் திரும்பி தர வேண்டும்
10 பெண்கள் சேர்ந்து சுயஉதவிக்குழுக்களை துவக்கினால் கடன் தருகிறார்கள். அதில் ஒரு உறுப்பினருக்கு 10 ஆயிரம் தருவார்கள். மாதம் இவர்கள் 640 வீதம் 20 மாதங்களுக்கு திருப்பி செலுத்த வேண்டும். அதாவது 10 ஆயிரம் ரூபாய் பெற்று 12500 ரூபாய் திரும்பி செலுத்த வேண்டும்.
குறைந்த வட்டியில் கடன்
குறைந்த வட்டிக்கு பணம் கிடைக்கிறதே என்ற ஆசையில் தமிழகம் முழுவதுமே மகளிர்கள் இந்த குழுக்களில் இணைந்து கடன் வாங்கியுள்ளார்கள். மகளிர் குழுவில் கடன் தரும் போதே குழுவிற்கு 10 பேர் சேர்ந்து தலைவியை தேர்ந்தெடுக்கிறார்கள். 10 ஆயிரம் தரும் போதே ஆவணச்செலவு என்று கூறி 750 ரூபாய் எடுத்துக் கொள்வார்கள்.
தலைவி தான் பொறுப்பு
ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட நாளில் குழுவின் தலைவியின் வீட்டுக்கு வந்து பணத்தை மொத்தமாக மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தினர் வசூலித்து செல்வர். குழுவில் யாராவது கட்டாவிட்டால் குழுவில் உள்ள தலைவி தான் பொறுப்பு. மேலும் குழுவில் அனைவரும் சேர்ந்து கட்ட வேண்டிய நெருக்கடி ஏற்படும். மேலும் கட்டாதவர்களுக்கு பல விதமான தொல்லைகள் வரும். இதனால் எதையாவது விற்று கூட கடன் தொகைக்கான தவணையை செலுத்தியே ஆக வேண்டும் இதனால் பணம் ஒவ்வொரு மாதமும் சரியாக மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தினர் எளிதாக வசூலித்து விடுகிறார்கள்.
எந்த சர்ச்சையும் இல்லாமல் திருப்பி செலுத்தும் குழுவில் உள்ளவர்களுக்கு 20 ஆயிரம் கடன் கொடுப்பார்கள். இதன்படி மாதத்தவணையை இரட்டிப்பாக அவர்கள் செலுத்த வேண்டும். கிட்டத்தட்ட தமிழகத்தின் எல்லா கிராமங்களிலுமே மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கி அவர்களின் வருமானத்தில் குறிப்பிட்ட பகுதியை பறித்து வருகிறார்கள்.
அரசு நடவடிக்கை எடுக்குமா
கந்துவட்டிவிட்டு சம்பாதித்தவர்கள் மகளிர் சுயஉதவிக்குழுவிற்கு மைக்ரோ பைனான்ஸ் என்ற பெயரை போலியாக வைத்துக்கொண்டு கடன் சேவைகளில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. இந்த விஷயத்தில் அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அதேநேரம் அரசால் அங்கீகரிக்கப்பட்ட மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் இதுகுறித்து அளித்துள்ள விளக்கத்தில் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் வந்த பிறகு தனி நபரிடம் அதிக வட்டிக்கு கடன் வாங்கும் கொடுமைகள் குறைந்துள்ளதாகவும், ஆர்பிஐ வழிகாட்டுதல் படி தாங்கள் செயல்படுவதாகவும் விளக்கம் அளித்துள்ளனர்.