எளிமை.. கடமை.. பொறுமை.. 'தல' தோனி... 28 வருடங்களுக்கு பிறகு முளைத்த அத்திப்பூ
சென்னை: பணம், அதிகாரம், அந்தஸ்து உள்ளவர்கள் சாதிப்பது என்பது இந்தியாவில் மிக எளிது. அவர்கள் எந்த பதவியையும் எந்த இடத்தையும் எளிதில் அடைய முடியும். ஆனால் எளிய குடும்பத்தில் பிறந்து மிகப்பெரிய உயரத்தை அடைவது இந்தியாவில் அபூர்வமான ஒன்று. இந்திய கிரிக்கெட்டில் அப்படி அபூர்வமானவர் தோனி. கபில்தேவ்க்கு பிறகு 28 வருடங்கள் கழித்து இந்தியாவுக்கு உலக கோப்பையை பெற்றுத்தந்த 'தல' தான் தோனி.
வாழ்க்கையில் எல்லாருக்குமே பெரிய இடத்திற்கு வர வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அதற்கான முயற்சி தான் இருப்பதில்லை. அப்படி வென்றவர்கள் இந்த உலகம் தூக்கி வைத்து கொண்டாடும். அதிலும் குறிப்பாக எந்த பின்பிலமும் இல்லாமல் வென்று சாதனையாளனாக மாறினால் அவரைத்தான் இந்த உலகமே ரோல் மாடலாக முன்னிறுத்தும். அவர்களுக்குத்தான் பெரும் புகழ் கிடைக்கும்.
அப்படித்தான் இன்று உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் கொண்டாடப்படுகிறார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. இவர் இதே ஜுலை 7ம் தேதி 1981ம் ஆண்டு ஜார்க்ண்ட் மாநிலம் ராஞ்சியில் பிறந்தார். இளமையில் ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக வாழ்க்கையை ஆரம்பித்த தோனி கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி 1998/99ஆம் ஆண்டு பீகார் கிரிக்கெட் அணியில் நுழைந்தார். அதன்பிறகு 2004ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்றார்.
தோனி கச்சிதம்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆடம் கில்கிரிஸ்டின் தீவிர ரசிகரான தோனி, அவரைப்போலவே சிறந்த விக்கெட் கீப்பராக இந்திய அணியில் பின்னாளில் மாறினார். தோனி வருகைக்கு முன்பு வரை இந்திய கிரிக்கெட் அணிக்கு தோனியை போன்று அதிரடியாக ஆடக்கூடிய அதேநேரம் விக்கெட் கீப்பிக்கு திறம்பட செய்யக்கூடிய மிக வலிமையான விக்கெட் கீப்பர்கள் இல்லை. நீண்ட காலமாக இருந்த இந்த வெற்றிடத்தை தோனி கச்சிதமாக நிரம்பிக்கொண்டார்.
உலக கோப்பையை வென்றது
அதன்பின்னர் அதிரடியான ஆட்டம் காரணமாக தோனிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் என்ற பொறுப்பு தேடி வந்தது. 2011ம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இலங்கையை வீழ்த்தி உலக கோப்பையை வென்று சாதனை படைத்தது.
சச்சின் கங்குலி பின்புலம்
1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையில் உலக கோப்பையை வென்ற இந்திய அணி அதன் பிறகு உலக கோப்பையை வெல்ல 28 வருடங்கள் ஆனது. இதில் கபில்தேவ் போலவே தோனியும் எந்தபின்புலமும் இல்லாமல் தனிஒருவனாக போராடி கிரிக்கெட்டி வெற்றி பெற்றவர் ஆவார். கபில்தேவ்க்கு பிறகு வந்த சச்சின், கங்குலி, டிராவிட், அசாருதின், ஜடேஜா என 90 களின் நாயகர்கள் எல்லோருமே கிரிக்கெட்டில் நுழைய பின்புலம் இருந்தது. ஊக்கம் அளிக்கும் வகையில் அவர்களுக்கு பொருளாதாரமும் இருந்தது
இறுதிவரை போராடுவார்
ஆனால் தோனிக்கு மட்டும் தான் அப்படி எந்தபின்புலமும் இல்லை என உறுதியாகச் சொல்லலாம். ஒவ்வொருமுறை இந்திய அணி தோல்வியை நெருங்கும் வேளைகளில் தோனி தனிஒருவனாக போராடி அணியை வெற்றி பெற வைத்துள்ளார். யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தோனி இருந்தால் இந்தியா வெல்லும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தினார். அந்த நம்பிக்கை பயணத்தால் தான் இந்திய கிரிக்கெட் அணி 2011ம் ஆண்டு உலக கோப்பையை வென்றது.
மகேந்திர சிங் தோனி
ஆகவே சொல்ல வருவது ஒன்றுதான். நம் நாட்டில் எத்தனையோ விஞ்ஞானிகள் இருக்கலாம்.ஆனால் நம் கண் முன்னே வந்து நிற்கும் மிகப்பெரிய தன்னம்பிக்கை அளிக்கும் விஞ்ஞானி என்றால் அப்துல் கலாம் தான். ஏனெனில் அப்துல் கலாம் தான் எளிய குடும்பத்தில் பிறகு மிகப்பெரிய விஞ்ஞானியாகி இந்தியாவை பெருமைப்பட வைத்தவர்.. அதுபோல் தான் தோனியும் எளிய குடும்பத்தில் பிறந்து உலக கோப்பையை வென்று இந்தியாவை உலக அரங்கில் பெருமைப்பட வைத்தார். அதனால் தான் தோனி 'தல' யாக தலைவனாக கொண்டாடப்படுகிறார்.