Mahendran: வெற்றிலை சாப்பிட்டபடி இயல்பாக மரணத்தை எதிர்கொண்ட அந்த, மகேந்திரனை மறக்க முடியுமா?
Recommended Video
சென்னை: மறைந்த இயக்குநர் மகேந்திரன் (79) பல துறைகளிலும் திறமை மிக்க சாதனையாளராக அறியப்படுபவர்.
முள்ளும் மலரும் போன்ற காவியத் திரைப்படங்களை செதுக்கிய இயக்குநர் என்பதோடு, மகேந்திரன் பல துறைகளிலும் சாதனையாளராக அறியப்பட்டவர். உதிரி பூக்கள் திரைப்படத்திற்காக 1980ல் சிறந்த இயக்குநருக்கான பிலிம் ஃபேர் விருது அவருக்கு கொடுக்கப்பட்டது.
1981ம் ஆண்டு, சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது, மகேந்திரன் இயக்கிய, நெஞ்சத்தை கிள்ளாதே திரைப்படத்திற்காக கிடைத்தது. சிறந்த நடிகருக்கான ஐஐஎப்ஏ உட்சவம் விருதை தெறி திரைப்படத்திற்காக 2017ம் ஆண்டு பெற்றார்.
விருதுகள்
தங்கப்பதக்கம், ரிஷிமூலம் படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். அலெக்ஸாண்டர் என்ற இயற்பெயர் கொண்ட மகேந்திரன், துக்ளக் போன்ற இதழ்களில் பணியாற்றியுள்ளார். கலை துறையில் சாதனை படைத்ததற்காக 2016இல் புதியதலைமுறையின் தமிழன் விருதை மகேந்திரன் பெற்றார். நடிகர் சாருஹாசன், நடிகைகள் சுகாசினி, அஸ்வினி, அஞ்சு போன்ற பலரை அறிமுகம் செய்தவர் இயக்குனர் மகேந்திரன்.
மதிப்பு உள்ளவர்
26 திரைப்படங்களுக்கு கதை எழுதியபிறகுதான் இயக்குநராக காலடி எடுத்து வைத்தார். தமிழ் சினிமாவில் யதார்த்த வாழ்வை பிரதிபலித்தவர் மகேந்திரன். சினிமா உலகில் அனைவருமே மிகுந்த மரியாதை வைத்திருந்த இயக்குநர்களில் ஒருவர் மகேந்திரன்.
இயல்பான மரணம்
கடைசியாக அவர் நடித்திருந்த பேட்ட திரைப்படத்தில் தனது மகனாலேயே கொலை செய்யப்படும் காட்சியில் மகேந்திரன் நடிப்பு பிரமிப்பை ஏற்படுத்தியிருக்கும். அதில் மரணத்தை வெற்றிலை பாக்கு சாப்பிட்டுக் கொண்டு, பதட்டமின்றி மகிழ்ச்சியோடு இயல்பாக எதிர்கொள்வது போல காட்சி இருக்கும். அதை பார்த்து கண் கலங்காத ரசிகர்கள் இருக்க முடியாது. இன்று மகேந்திரன் அதே போன்று இயல்பான மரணத்தை தழுவியுள்ளார். அவரது ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்று, என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தங்கள் கண்ணீரை காணிக்கையாக்கி வருகிறார்கள்.
ரஜினிகாந்த் அஞ்சலி
மகேந்திரன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக காலை 10 மணி முதல் அவரது பள்ளிக்கரணை இல்லத்தில் வைக்கப்படுகிறது. இதன் பிறகு இன்று மாலை 5 மணியளவில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. முன்னணி நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் மகேந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்த உள்ளனர்.