சென்னை போலீஸ் கமிஷனராக பதவியேற்றார் மகேஷ்குமார் அகர்வால்.. பல விருது பெற்ற சாதனையாளர்
சென்னை: சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக மகேஷ்குமார் அகர்வால் இன்று முறைப்படி பொறுப்பேற்றார். 39 அதிகாரிகள் பணியிடமாற்றத்தின் ஒரு பகுதியாக மகேஷ்குமார் அகர்வால் சென்னை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டிருந்தார்.
Recommended Video
சென்னையின் 107வது காவல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்றுள்ளார். சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று காலை 11 மணியளவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏற்கனவே கமிஷனராக இருந்த ஏ கே விஸ்வநாதன் புதிய ஆணையர் மகேஷ்குமாரிடம் முறைப்படி பொறுப்புகளை ஒப்படைத்து விடைபெற்றார்.
ஏற்கனவே மகேஷ்குமார் அகர்வால் வகித்துவந்த சென்னை காவல்துறை செயலாக்க பணிகள் பணியிடத்துக்கு விஸ்வநாதன் மாற்றப்பட்டுள்ளார்.
மக்களிடம் பொறுப்பாக நடந்து கொள்ளுங்கள்.. போலீஸாருக்கு ஆணையர் விஸ்வநாதன் உருக்கமான கடிதம்
சென்னை பணி அனுபவம்
மகேஷ்குமார் அகர்வால் ஏற்கனவே, சென்னையில், பூக்கடை துணை கமிஷனர், சென்னை தெற்கு போக்குவரத்து துணை கமிஷனர், தெற்கு மண்டல கூடுதல் கமிஷனர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார். கமிஷனர் விடுமுறையில் செல்லும் கால கட்டங்களில் அவர் கமிஷனர் பொறுப்பையும் கவனித்துள்ளார். எனவே, சென்னையின் கள நிலவரத்தை விரல் நுனியில் வைத்துள்ள அனுபவம் கொண்டவர்தான் மகேஷ்குமார் அகர்வால்.
பின்னணி
பஞ்சாப் மாநிலம் சண்டிகரை சேர்ந்த மகேஷ் அகர்வாலின் தந்தை பிரகாஷ் சந்த் அகர்வால் வக்கீல் ஆவார். இவரும் சட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்தான். போலீஸ் மேலாண்மை படிப்பிலும் இவர் தேர்ச்சி பெற்றுள்ளார். 1994ம் ஆண்டில் தனது 23 வது வயதில் ஐ.பி.எஸ்.தேர்ச்சி பெற்று இந்திய போலீஸ் துறைக்கு வந்தார். தமிழக காவல்துறையில் இவர் தனது பணியை தொடங்கினார். தேனி, தூத்துக்குடி மாவட்டங்களில் சூப்பிரண்டாக பணியாற்றியுள்ளார். தேனி மாவட்டத்தில் இவர் பணியாற்றிய போது ஜாதி கலவரம் நிகழாமல் பார்த்துக் கொண்டதோடு, கள்ளச் சாராய ஒழிப்பில் சாதனை படைத்தார். இதற்காக அரசின் விருதும் பெற்றார். 7 ஆண்டுகள் இவர் சி.பி.ஐ.யில் பணியாற்றினார். சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி.யாகவும் பணியாற்றியுள்ளார்.
முக்கிய வழக்குகள்
சென்னை ரயில் குண்டு வெடிப்பு வழக்கு, ரயில் பெட்டி கூரையில் துளை போட்டு ரூ.5.78 கோடி கொள்ளை போன வழக்குகளில் துப்பு துலக்கியதில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. சென்னை சிறுசேரி பெண் கம்ப்யூட்டர் இன்ஜினியர் கொலை செய்யப்பட்ட வழக்கிலும் குற்றவாளிகளை கைது செய்து, அவர்களுக்கு நீதிமன்றத்தில் தண்டனை பெற்று தர பெரிதும் உதவினார்.
விருது பெற்றவர்
மதுரை போலீஸ் கமிஷனராகவும் பணியாற்றியவர். நேர்மை மற்றும் சிறந்த புலனாய்வு ஆகியவை இவரது டிரேட் மார்க் ஆகும். தமிழில் பேசுவார் என்றாலும், வட இந்திய போலீஸ் அதிகாரிகள் தமிழ் பேச்சு வழக்கு எப்படி இருக்குமோ அப்படி பேசுவது இவரது மற்றொரு டிரேட் மார்க் ஆகும். மகேஷ்குமார் அகர்வால் தனது தலைசிறந்த பணிக்காக போலீஸ் விருது மற்றும் முதல்வர் விருதுகளை பெற்றவர்.