ராஜ்யசபா சீட் ப்ளஸ் மத்திய அமைச்சர் பதவி... ஆர்.எஸ்.எஸ்.லாபியில் மைத்ரேயன் மும்முரம்!
சென்னை: மத்திய அமைச்சரவையில் இடம்பெறுவதற்கு அதிமுகவின் வைத்திலிங்கம், ரவீந்தரநாத் குமார் இடையே போட்டி நிலவி வருகிறது. இதனிடையே ஆர்.எஸ்.எஸ். லாபி மூலம் ராஜ்யசபா சீட் ப்ளஸ் அமைச்சர் பதவி பெற கமுக்கமாக முயற்சித்து வருகிறாராம் மைத்ரேயன்.
பாஜகவின் மூத்த தலைவராக இருந்தவர் மைத்ரேயன். பின்னர் அதிமுகவில் இணைந்து ராஜ்யசபா எம்.பி.யானார். அவரது பதவிக் காலம் வரும் ஜூலையுடன் முடிவடைகிறது.
அதிமுக பிளவுபட்ட போது ஓபிஎஸ் அணியில் இருந்தார். அதிமுக அணிகள் இணைந்த பின்னரும் மைத்ரேயனுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை. இதனால் கடுமையான அதிருப்தியில் இருந்து வந்தார்.
ஆம்புலன்சில் ஏறும் வரை உங்க சொந்தம்.. ஏறிட்டா எங்க சொந்தம்.. தஞ்சையில் நடந்த ஒரு நெகிழ்ச்சி சம்பவம்
ஓபிஎஸ் மகன்
தமது ஆதங்கத்தை அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டு சலசலப்பை ஏற்படுத்தி வந்தார் மைத்ரேயன். இந்த நிலையில் லோக்சபா தேர்தலில் தேனியில் மட்டும் அதிமுக வென்றது. இதனால் தேனியல் வென்ற மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி வாங்கித் தருவதில் துணை முதல்வர் ஓபிஎஸ் முயற்சித்துப் பார்த்தார்.
வைத்திலிங்கம் போர்க்கொடி
ஆனால் சீனியர் எம்.பி.யான எனக்குத்தான் அமைச்சர் பதவி வேண்டும் என வைத்திலிங்கம் மல்லுக்கட்டினார். இதனால் அதிமுகவில் யாருக்கும் அமைச்சர் பதவி தரப்படவில்லை. இருந்தாலும் மனம் தளராமல் இருதரப்புமே அமைச்சர் பதவியை பெற்றுவிடுவது என்பதில் உறுதியாக இருக்கிறது.
மைத்ரேயன் முயற்சி
இந்த களேபரத்துக்கு மத்தியில் தமது ஆர்.எஸ்.எஸ். லாபி மூலம் மீண்டும் ராஜ்யசபா எம்.பி.யாவதுடன் அமைச்சர் பதவியையும் பெற்றுவிட முடியாதா? என முயற்சிக்கிறாராம் மைத்ரேயன் என்கின்றன டெல்லி தகவல்கள். என்னதான் அதிமுகவில் எம்.பி.யாக இருந்தாலும் அவரை பாஜகவின் முகமாகத்தான் அனைவரும் பார்க்கின்றனர்.
அதிமுகவில் அதிருப்தி
இதையே தங்களுக்கு சாதகம் என நினைக்கிறது ஆர்.எஸ்.எஸ். தரப்பு. இதைவைத்துதான் ராஜ்யசபா சீட், அமைச்சர் பதவி என லாபி செய்து வருகிறாராம் மைத்ரேயன். இருக்கிற தலைவலியில் இதுவேறயா? என நொந்துகிடக்கிறார்களாம் அதிமுக புள்ளிகள்.