மைத்ரேயன் மடை மாறும் நாள் வெகு தூரத்தில் இல்லையாம்... பாஜகவா.. திமுகவா??
திமுக அல்லது பாஜகவில் மைத்ரேயன் இணைய வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது
சென்னை: ரொம்ப நாள் இல்லை.. கூடிய சீக்கிரமே மைத்ரேயன் திமுக, அல்லது பாஜகவில் இணைந்துவிடுவார் என்ற பேச்சு வலுவாக எழ ஆரம்பித்துள்ளது.
ராஜ்ய சபா எம்பியான மைத்ரேயன் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து, அவையில் உணர்ச்சிவசப்பட்டு பேசினார். அப்போது ஓரிரு முறை கண் கலங்கியும் பேசினார்.
"சூரியோதயம் எனினும் ''நீண்ட அனுபவத்திற்கு பின் மாநில அரசியலுக்கு திரும்ப உள்ளேன். பார்லிமென்ட்டைப் பொறுத்தவரை இது எனக்கு அஸ்தமன நேரமாக இருக்கலாம். ஆனால் மாநில அரசியலில் இனிமேல்தான் எனக்கு சூரியோதயம் ஆரம்பிக்கப்போகிறது'' என்றார்.
பாஜக அபிமானி
மைத்ரேயன் இப்படி பேசியபோதே, எங்கேயோ இடிக்க செய்தது. மைத்ரேயனை பொறுத்தவரை, இவர் ஒரு பக்கா பாஜகவின் அபிமானி. அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளராக இருந்தவர். ஜெயலலிதாவுடன் நல்ல புரிந்துணர்வு தொடர்பு வைத்திருந்தவர். தனிப்பட்ட முறையில் இவர் மீது அதிக நம்பிக்கை கொண்டவர் ஜெயலலிதா, அதனால்தான் ஏற்கனவே 2 முறை எம்பியாக இருந்த நிலையிலும், கடந்த முறையும் வாய்ப்பு தந்தார்.
சீட் கிடைக்கவில்லை
இதனால் பாஜக-அதிமுக கூட்டணிக்கு இடையே ஒரு பாலமாகவும் செயல்பட்டார் மைத்ரேயன். அதனால் இருகட்சியிலுமே இவருக்கு நல்ல பழக்கமும், செல்வாக்கும் உள்ளது. ஆனால் இப்போது எம்பி தேர்தலில் போட்டியிட விருப்பமாக இருந்தும், இவருக்கு சீட் தரப்படவில்லை. மேலும் ராஜ்ய சபா சீட்டுக்காக கேட்டு காத்திருந்தும், அதையும் அதிமுக தரவில்லை. இதற்கு காரணம், இவர் என்னதான் அதிமுகவில் இருந்தாலும் பாஜகவின் பிம்பம் என்பதை முழுசாக உடைத்தெறிய முடியவில்லை என்பதுதான் பெரிய மைனசாக உள்ளதாக பார்க்கப்பட்டது.
விமர்சனம்
தொடர்ந்து அப்செட்டில் இருந்த மைத்ரேயன், தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது என்று ஜெயலலிதா சமாதியில் நின்று பகிரங்கமாகவே பேட்டி அளித்தார். இப்போது அவரது பேட்டி பற்றி அமைச்சர் ஜெயக்குமார் கருத்து சொல்லும்போது, "பதவி கொடுக்கவில்லை என்பதற்காக கட்சியில் இருப்பவர்களை விமர்சிக்க கூடாது, அரசியலில் ஏற்றத்தாழ்வு சகஜம். இதுக்கு முன்னாடி எல்லாம் எனக்கும்தான் சீட் மறுக்கப்பட்டது, நான் கட்சிக்காக உழைக்கலையா என்னா? அதுக்காக அழுதேனா?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
அழுதேனா?
ஜெயக்குமார் இப்படி பேசியதில் இருந்தே கட்சிக்குள் மைத்ரேயன் அதிருப்தியில் உள்ளார் என்பதும், நல்ல இணக்கம் கட்சி தலைமையிடம் இல்லாமல் பூசல் நிலவுவதாக பகிரங்கமாகவே தெரிகிறது. அது மட்டும் இல்லை... ஆட்சிக்கு எடப்பாடியாரும், கட்சிக்கு ஓபிஎஸ்-ம் தலைமையும் இருக்க வேண்டும் என்பதுதான் மைத்ரேயனின் கருத்தாக கூறப்படுகிறது. மைத்ரேயனின் இந்த கருத்துக்கு பின்னால் பாஜகவின் திட்டம் ஏதாவது இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.
திமுக?
ஏற்கனவே ஓபிஎஸ்ஆட்சி முடிந்தவுடன் அதிமுகவுக்கு ஓபிஎஸ்ஸை தலைமை ஏற்க வைக்கும் வகையில் பாஜக செயல்பட்டாலும் ஆச்சரியப்படுவற்கில்லை என்றும் ஒரு பேச்சு எழுகிறது. அதனால் இன்னமும் செல்வாக்கு உள்ள பாஜகவில் மைத்ரேயன் இணையவும் வாய்ப்பு உள்ளது என்றும், நம்பி வருபவர்களுக்கு திமுகவில் பெரிய பொறுப்பு கொடுத்து கவுரவிக்கப்படுவதால், அந்த கட்சியிலும் இணைய வாய்ப்பு உள்ளதும் சொல்லப்படுகிறது. எதுவானாலும் அதிமுகவை விட்டு மைத்ரேயன் வெளியேறும் நாள் நெருங்கி வருகிறது போலும்!