அன்புமணிக்கு புது போஸ்டிங்காமே?.. "அவர்"தான் தலைவரா.. தைலாபுர தோட்டத்து பரபரப்பு
அன்புமணி பாமகவின் தலைவராக நியமிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது
சென்னை: புது ரத்தம் பாய்ச்சப்பட்டு, புதுப்பொலிவுடன், பாய்ந்து வர பாமக தயாராகி வருகிறது.. அதற்கான முயற்சிகளில் தைலாபுரம் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
Recommended Video
பாமக தன்னை பலப்படுத்தி கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி உள்ளது.. அதேசமயம், இன்றைய தமிழக அரசியலில், எதற்காக பாமகவுக்கு சறுக்கல் வந்துள்ளது? எதற்காக சொந்த தொகுதியில்கூட அன்புமணியால் வெற்றி பெற முடியாமல் போனது என்ற ஆராய்ச்சிக்குள் அக்கட்சி மேலிடம் நுழைந்து பார்க்க தயாராக இல்லை என்றே தெரிகிறது.
அதேபோல, கணிசமான வாக்கு வங்கி கையில் இருந்தாலும், கட்சியின் முக்கியத்துவம் குறைந்து வருவது குறித்தும் சுயபரிசோதனை செய்து கொள்ள பார்க்கவும் அக்கட்சி விரும்பவில்லை போலும்..
ஓமைக்ரான் பரவிய நாடுகளுடனான விமானப் போக்குவரத்தை மத்திய அரசு தடை செய்ய வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
தேமுதிக
விஜயகாந்த்துக்கு உடம்பு சரியில்லாமல் தேமுதிக சறுக்கிகொண்டு போய்விட்ட நிலையில், அதை பாமக தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள தவறிவிட்டதா? அல்லது ஆரம்பத்தில் எத்தனையோ வாக்குறுதிகளை ராமதாஸ் தந்தும், அதை சரியாக கடைப்பிடிக்க முடியாமல் போனதால் மக்களிடம் நம்பக்கத்தன்மையை பாமக இழந்துவிட்டதா? என்று உறுதியாக சொல்ல தெரியவில்லை..
எழுச்சி
எனினும், இன்று விசிக எழுச்சியுடன் 2 எம்பிக்களுடன், அதுவும் ஆளும் கட்சியுடன் இணைந்துள்ளதை பாமகவால் எதிர்கொள்ள முடியாத போக்கும் உள்ளது.. அதனாலேயே வடமாவட்டங்களில் தங்களுடைய செல்வாக்கை தக்க வைத்து கொள்ளவும், தென்மாவட்டங்களில் கட்சி செல்வாக்கை அதிகப்படுத்தும் முயற்சியிலும் பாமக இறங்கி வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி உள்ளதாகவே தெரிகிறது.
வேதனை
சமீப நாட்களாக நடந்து வரும் கூட்டங்களில், தன்னுடைய வேதனையும், அதிருப்தியும் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளிப்படுத்தியே வருகிறார்.. உள்ளாட்சி தேர்தலில் கட்சியினரே துரோகம் செய்து விட்டனர், போட்டியிடுவதற்குக் கூட ஆட்கள் இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளதே என்று மனம் நொந்தும் பேசி வருகிறார். எனவேதான், தான் உயிருடன் இருக்கும்போதே அன்புமணியை கோட்டையில் உட்கார வைத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தை மீண்டும் கட்சிக்குள் ஆழமாக வேரூன்றி வருகிறார் டாக்டர் ராமதாஸ்...
ஓட்டெடுப்பு
இதற்காக பாமகவை பலப்படுத்த ஒருசில மாற்றங்களை கையில் எடுக்கப்போவதாக சொல்கிறார்கள்.. அதன்படி, அக்கட்சியின் மாநில தலைவர் அல்லது செயல் தலைவர் பதவியை அன்புமணிக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.. இதற்காகவே பொதுக்குழுவில் ஓட்டெடுப்பு நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.. அதுவும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் வெற்றியை மையப்படுத்தியே இத்தகைய மூவ்களை பாமக மேலிடம் யோசித்து வருவதாக தெரிகிறது.
பாமக தலைவர்
பாமக தலைவராக ஜிகே மணி இப்போதைக்கு இருப்பதால், அவர் வகிக்கும் மாநில தலைவர் பதவி, இளைஞரணி தலைவரான அன்புமணிக்கு வழங்கப்படுமா அல்லது செயல் தலைவர் பதவி வழங்கப்படுமா என்று தெரியவில்லை.. எதுவானாலும், இன்னும் ஓரிரு மாதங்களில் பொதுக்குழு கூட்டத்தில் முடிவாகும் என்கிறார்கள். 2019-லேயே அன்புமணிக்கு செயல்தலைவர் பதவி என்ற பேச்சு எழுந்தது.. என்ன காரணம் என்று தெரியவில்லை, அது அப்படியே அமுங்கிவிட்டது.
இளைஞர்கள்
அன்புமணியின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் இளைஞர்கள் அதிலும் குறிப்பாக அன்புமணி தலைமையில் ஆட்சி என்பதில் உறுதியாக இருப்பவர்களை கட்சியின் முக்கிய பொறுப்புகளில் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள்.. சமீபத்தில் கட்சியில் துணை பொதுச்செயலாளர் பதவி ஒழிக்கப்பட்டு, மாவட்ட செயலாளர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டது.. பிறகு, புதிய மாவட்ட செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அந்த லிஸ்ட்டும் வெளியிடப்பட்டது.. இந்த லிஸ்ட்டில் நிர்வாகிகள் அன்புமணியின் இளைஞர் அணியை சேர்ந்தவர்களாகவே நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
ஜிகே மணி
இப்போது, தற்போது மாநில தலைவராக இருக்கும் ஜிகே மணி சட்டமன்ற பாமக குழு தலைவராக இருக்கிறார். அன்புமணிக்கு தலைவர் பதவி வழங்கப்பட்டால் ஜிகே மணிக்கும் முக்கியமான பதவி வழங்க முடிவு செய்துள்ளனர்.. எனவே பொதுக்குழுவில் அன்புமணியை தலைவராக தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
பட்டியல்
புதிய மாவட்ட செயலர்கள் பட்டியலில், எம்எல்ஏக்கள் மற்றும் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.. மற்ற ஜாதியினருக்கும் பிரதிநிதித்துவம் தரப்பட்டுள்ளது.. இதற்கு காரணம், ஜெய் பீம் விவகாரத்தில் பாமக, சாதி அரசியலைத்தான் கையில் எடுத்தது என்றும் இது பாமகவுக்கே மைனஸ் ஆக போய்விட்டதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.. அன்புமணியை முதல்வராக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் மட்டும் போதுமா? திரும்ப திரும்ப சாதி அரசியலை கையில் எடுப்பது பாமகவுக்கு பெரிய பின்னடைவுதானே என்றும் கேள்வி எழுப்புகிறார்கள்.
அதிருப்தி
இப்படி ஒரு அதிருப்தியை மக்களிடம் போக்கவே, பாமக மேலிடம் பல்வேறு வகைகளில் புது புது யுக்திகளை கையில் எடுத்து வருகிறதாம். எப்படிபார்த்தாலும், 60 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும், அன்புமணியை முதல்வராக்க வேண்டும் என்ற இரட்டிப்பு நோக்கில் பாமக அடுத்த இன்னிங்ஸை தொடங்கி உள்ளது.. இதன் போக்கு எப்படி இருக்க போகிறது என்பது இனிமேல்தான் தெரியவரும்.!