ஜல்சக்தி துறைக்கு கீழ் கொண்டுவரப்பட்ட காவிரி ஆணையம்.. நமக்கு பாதிப்பு இல்லை.. தமிழக அரசு விளக்கம்
காவேரி நீர் மேலாண்மை ஆணையம் ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டதற்கு தமிழக அரசின் பொதுப்பணித்துறை துறை தற்போது விளக்கம் அளித்துள்ளது.
சென்னை: காவேரி நீர் மேலாண்மை ஆணையம் ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டதற்கு தமிழக அரசின் பொதுப்பணித்துறை துறை தற்போது விளக்கம் அளித்துள்ளது.
தன்னிச்சையான அதிகாரம் கொண்ட ஆணையமான காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை மத்திய ஜலசக்தித் துறையின் கீழ் கொண்டு வரப்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆணையம் அமைக்கப்பட்டதன் நோக்கத்தையே சிதைக்கும் வகையில் இந்த உத்தரவு இடப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த ஆணையத்தின் சக்தி பறிக்கப்பட வாய்ப்புள்ளது.
இதற்கு எதிராக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டனங்களை தெரிவிக்க தொடங்கி உள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசின் பொதுப்பணித்துறை அளித்துள்ள விளக்கத்தில், தமிழ்நாடு அரசு எடுத்த இடைவிடாத சட்டபோராட்டத்தின் விளைவாக காவேரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு அதை அப்போதைய நீர்வள ஆதாரம், நதிநீர் மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சகம்
1.6.2018 அன்று மத்திய அரசிதழில் அறிவிக்கை வெளியிட்டது.
அதில் ஆணையத்தின் அதிகாரம் மற்றும் பணிகள் அனைத்தும் காவேரி நடுவர்மன்றம் 5.2.2007-ல் பிறப்பித்த இறுதி ஆணையை கருத்தில் கொண்டு தான் செயல்படும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. காவேரி நீர் மேலாண்மை ஆணையம் பிரிவு 15-ன்படி அது எடுக்கும் முடிவுகள் இறுதியானது என்றும், அது படுகை மாநிலங்களைக் கட்டுப்படுத்தும் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி காவேரி நீர் மேலாண்மை ஆணையத்தின் செயல்பாடுகளில் மத்திய அரசு தலையிட முடியாது. மத்திய அரசு மே, 2019-ல் நீர்வள ஆதாரம், நதிநீர் மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சகம் மற்றும் குடிநீர் மற்றும் துப்புறவு அமைச்சகம் ஆகிய இரண்டையும் இணைத்து புதிதாக ஜல் சக்தி அமைச்சகத்தை உருவாக்கியது.
காவிரி நீர் மேலாண்மை ஆணையம்.. ஜலசக்தித் துறைக்கு கீழ் கொண்டு வந்த மத்திய அரசு.. பரபரப்பு உத்தரவு!
இதனை அடுத்து மத்திய அரசு ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கீடு செய்துள்ள பொருண்மைகள் குறித்து உள்ள விதிகளுக்கு திருத்தங்கள் மேற்கொண்டுள்ளது. இதில் ஜல் சக்தி அமைச்சகம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டும் இவ்வமைச்சகத்தால் கையாளக்கூடிய பல பொருண்மைகளும் கொண்டுவரப்பட்டுள்ளன. இதில் கோதாவரி மற்றும் கிருஷ்ணா வாரியமும் மற்றும் உச்ச நீதிமன்ற ஆணைப்படி ஏற்படுத்தப்பட்டுள்ள காவேரி நீர் மேலாண்மை ஆணையமும் அடங்கும்.
மேற்கூறியவாறு ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் துறைகள், நிறுவனங்கள் மற்றும் இதர அமைப்புகள் ஆகியவைகளை கையாளக்கூடிய பொருண்மைகள் குறித்து விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது முற்றிலும் ஒரு நிர்வாக நடவடிக்கையாகும். பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளம் மற்றும் இதர நிர்வாகங்களை மேற்கொள்வதற்கான ஒரு நிர்வாக ரீதியான நடவடிக்கை இது.
இதனால் தமிழகத்திற்கு பாதிப்பு கிடையாது. தமிழக விவசாயிகள் இதனால் பாதிப்பு அடைய மாட்டார்கள். தமிழக விவசாயிகளுக்கு எப்போதும் போல இதனால் நீர் கிடைக்கும். தமிழக விவசாயிகள இதனால் அச்சம் அடைய தேவையில்லை, என்று அந்த விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது.