பிரசார ஆட்டோவில் பீரங்கி வடிவில் டார்ச்லைட்.. "என்னா ஆட்டோக்கார ஆண்டவரே!" பிரசவத்திற்கு இலவசமா?
சென்னை: டார்ச்லைட் சின்னம் பொருத்தப்பட்டு வடிவமைக்கப்பட்ட ஆட்டோ ஒன்று சென்னையை கலக்கி வருகிறது. இந்தியாவில் டிஜிட்டல்மயமான கட்சிகளில் ஒன்றான மக்கள் நீதி மய்யம் இது போன்ற புதுமைகளையும் புகுத்தி வருகிறது. இந்த ஆட்டோவில் அமர்ந்து பிரச்சாரத்தையும் கமல்ஹாசன் தொடங்கி வைத்தார்.
கடந்த 22-ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் 4ஆம் ஆண்டு தொடக்க விழா சென்னை தாம்பரத்தில் உள்ள சாய்ராம் என்ஜினியரிங் கல்லூரியில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு வந்தவர்களுக்கு அங்கிருந்த ஆட்டோ அதுவும் நீல நிறத்திலானது கண்களை உறுத்திக் கொண்டே இருந்தது.
சரி என்னதான் என அருகில் சென்று பார்த்தால் ஆட்டோவின் தலைக்கு மேல் பீரங்கி போன்ற டார்ச் லைட் சின்னம் பொருத்தப்பட்டுள்ளது. அதில் முன்பக்கத்தில் எரியும் விளக்கில் கமல்ஹாசனின் புகைப்படம் பொருத்தப்பட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யம்
அதன் கைப்பிடி மஞ்சள் நிற ஒளியில் உள்ளது. ஆட்டோவை சுற்றிலும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொடி தொங்கவிடப்பட்டுள்ளது. ஆட்டோவின் முகப்பில் மக்கள் நீதி மய்யம் என எழுதப்பட்டிருந்தது. பின்புறத்தில் கருப்பு சட்டை, வெள்ளை வேட்டியில் கமல்ஹாசன் அமர்ந்திருக்கும் புகைப்படம் போடப்பட்டுள்ளது.
வடிவமைத்தவர் பெயர்
மேலும் அதே பேனரில் ஆட்டோவை வடிவமைத்தவரின் பெயர் போன் எண், கட்சி பொறுப்பு ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த ஆட்டோவை வடிவமைத்தவர் எஸ் பி ஜெகதீஷ், இவர் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி மாநகர செயலாளர் (பகுதி) ஆவார். இந்த புதுவிதமான முயற்சி ஏன் என கேட்டபோது அவர் கூறுகையில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் தனி சின்னமான டார்ச்லைட் சின்னம் கடைசி நேரத்தில் கிடைத்தது.
சென்னை
அதாவது தேர்தலுக்கு 18 நாட்களுக்கு முன்புதான் கிடைத்தது. இதனால் மக்களிடம் இந்த சின்னத்தை கொண்டு சேர்ப்பது சவாலாக இருந்தது. இதையடுத்து அடுத்த முறை முன்கூட்டியே சின்னத்தை பிரபலப்படுத்த முடிவு செய்தோம். அதன்படி ஆட்டோவில் பீரங்கி போல் சின்னத்தை வடிவமைத்துள்ளேன். தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் உள்ளதால் இந்த ஆட்டோவை சென்னையில் உள்ள பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்வேன்.
ஜெகதீஷை
இதை பார்க்கும் மக்களின் மனதில் எங்கள் டார்ச்லைட் சின்னம் பதிந்து விடும். இதை வடிவமைக்க ரூ 75 ஆயிரம் செலவிடப்பட்டது. ஆனால் மக்களுக்கு நல்லாட்சி கிடைக்க நான் செலவிட்டது சிறுபணமாகும். அடுத்தது டெம்போ வேன் ஒன்றில் மிகப் பெரிய டார்ச்லைட் சின்னத்தை வடிவமைக்க ஆசை உள்ளது என்றார். இவரது ஆட்டோவில் கமல்ஹாசன் அமர்ந்து ஜெகதீஷை பாராட்டினார். பின்னர் ஆட்டோவை ஸ்டார்ட் செய்து பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். இது அங்கிருந்த தொண்டர்களை உற்சாகமடைய வைத்தது.