மக்கள் நீதி மய்யத்தின்.. தலைமை நிலையப் பரப்புரையாளராக.. அனுஷா ரவி நியமனம்.. கமல் அறிவிப்பு
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை நிலையப் பரப்புரையாளராக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் அனுஷா ரவியை நியமித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. திமுக மற்றும் அதிமுக கட்சிகள் கூட்டணியை இறுதி செய்வது, வேட்பாளர் தேர்வு ஆகியவற்றில் மும்முராக ஈடுபட்டுள்ளன.
அதேபோல இந்தத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் மூன்றாவது அணியாக உருவெடுத்துள்ளது. ஏற்கனவே, சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் ஐஜேக ஆகியவை மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் தங்கள் கூட்டணியை அறிவித்துள்ளன.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை நிலையப் பரப்புரையாளராக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் அனுஷா ரவி நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அக்கட்சியின் தலைவர் கமல் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மக்கள் நீதி மய்யத்தின் தலைமை நிலையப் பரப்புரையாளராக டாக்டர் அனுஷா ரவியை நியமனம் செய்துள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
கல்வித் துறையிலும், தொழில் முனைவிலும் நெடிய அனுபவம் கொண்ட டாக்டர். அனுஷா ரவியின் வருகை கட்சியை மேலும் வலுப்படுத்தும் என்பதில் ஐயமில்லை. மக்கள் நீதி மய்யத்தின் அனைத்து நிர்வாகிகளும் உறுப்பினர்களும் வழக்கம் போல சிறப்பான ஒத்துழைப்பை தரும்படி கேட்டுக் கொள்கிறேன்" என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.