அன்று மோடிக்கு உதவினார்.. இன்று கமலுக்கு உதவுகிறார்.. மநீம அழைத்து வந்த கிங் மேக்கர்.. நல்ல முடிவு!
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சிக்காக தேர்தல் ஆலோசனைகளை வழங்க தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் அழைத்து வரப்பட்டுள்ளார்.
பிரபல செய்தியாளர் கரன் தப்பரிடம் பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்த சமயத்தில் அளித்த பேட்டி மிகவும் பிரபலமானது. அந்த பேட்டியில் கரன் தாப்பர் கேட்ட சில கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதில் சொல்ல முடியாமல் கஷ்டப்பட்டு திணறிப்போனார்.
முதல்வன் படத்தில் அர்ஜுனை எதிர்கொள்ள முடியாமல், ரகுவரன் திணறுவது போல மோடி அந்த பேட்டியில் திணறிப்போய் தண்ணீர் எடுத்து குடிக்கும் நிலைக்கு சென்றார். அதன்பின் மோடிக்கு தேர்தல் நேர ஆலோசகராக பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டார்.
என்ன செய்தார்
தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் 2011 குஜராத் சட்டசபை தேர்தலில் மோடிக்காக பிரச்சார யுக்திகளை வகுத்து கொடுத்தார். அந்த தேர்தலில் மோடி வெற்றிபெற காரணமாக அவர் இருந்தார். அதேபோல் 2014 லோக்சபா தேர்தலிலும் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் பாஜகவால் பயன்படுத்தப்பட்டார். அப்போதும் பாஜக நாடு முழுக்க பிரபலம் அடைந்து வெற்றிபெற்றது.
பேச்சு
இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு பத்திரிக்கையாளர்கள் மீது இருக்கும் பயம் போக வேண்டும் என்பதற்காக மோடியிடம் அந்த கரன் தாப்பர் வீடியோவை 30 முறை போட்டு காட்டினார் பிரசாந்த் கிஷோர். மோடி எங்கே தப்பு செய்கிறார், மேடையில் எப்படி பேச வேண்டும் , கேள்விகள் கேட்டால் எப்படி பதில் சொல்ல வேண்டும், மக்கள் மத்தியில் எப்படி தன்னை காட்டிக்கொள்ள வேண்டும் என்று பிரசாந்த் கிஷோர் மோடிக்கு சொல்லிக்கொடுத்தார்.
அதே நபர்
அது மோடிக்கு என்று ஒரு இமேஜ் உருவாக காரணமாக இருந்தது. பிரசாந்த் கிஷோர் ஆலோசனை வழங்கிய கட்சிகள் எல்லாம் பெரும்பாலும் தேர்தலில் வெற்றிபெற்று சாதனை படைத்து இருக்கிறது. அவர்தான் தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தமிழ்நாட்டில் ஆலோசகராக இருக்கிறார். கடந்த ஒரு மாதமாக தமிழக சட்டசபை தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யம் கட்சியை அவர் தயார் செய்து வருகிறார்.
கட்சி பலம்
மக்கள் நீதி மய்யம் கட்சியை அடிமட்டத்தில் இருந்து வளர்க்க வேண்டும். பதவிகள் விரிவாக இருக்க வேண்டும். மக்களிடம் இன்னும் அதிகமாக, கட்சியின் அடுத்த கட்ட தலைவர்கள் உரையாட வேண்டும் என்று நிறைய ஆலோசனைகளை பிரசாந்த் கிஷோர் வழங்கி உள்ளார். அதன் தலைவர் கமல்ஹாசன் தற்போது பிரசாந்த் கிஷோர் சொல்லியபடியே கட்சியில் மாற்றங்கள் கொண்டு வர தொடங்கிவிட்டார்.
என்ன மாற்றம்
அதன்படி மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு புதிதாக 6 பொதுச்செயலாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இவர்கள் தமிழகத்தை ஆறாக பிரித்து அதை நிர்வாகம் செய்வார்கள். அதேபோல் துணை தலைவர் ஒருவர் இவர்களின் பணியை கவனிக்க நியமிக்கப்படுவார். துணை தலைவர் நேரடியாக தலைவர் கமல்ஹாசனிடம் தகவல்களை பெறுவார்.
உருவாக்குகிறார்
இப்படி ஒரு சரியான அமைப்பை உருவாக்க பிரசாந்த் கிஷோர் ஆலோசனை வழங்கி உள்ளார். இதை மக்கள் நீதி மய்யம் ஏற்றுக்கொண்டு, நிர்வாகிகள் இன்னும் சில நாட்களில் அமைக்கப்பட உள்ளனர். இது மட்டுமில்லாமல் மக்கள் நீதி மய்யம் கட்சியை தமிழகம் முழுக்க பிரபலப்படுத்தவும் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை வழங்கி உள்ளார்.
சூப்பர்
பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் போன்ற வெற்றிகரமான கட்சிகளுக்கு ஆலோசனை வழங்கும் கிங் மேக்கர் பிரசாந்த் கிஷோர் தற்போது மக்கள் நீதி மய்யத்திற்கு வந்துள்ளது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் நீதி மய்யம் இதன் மூலம் தமிழக சட்டசபை தேர்தலுக்கு தயாராகிவிட்டது என்று கூறலாம்.