கமலுக்கு பிரசாந்த் கிஷோர் கொடுத்த அந்த அட்வைஸ்.. முக்கியமானவர்களுக்கு கொக்கி போடும் மநீம!
மக்கள் நீதி மய்யம் கட்சி உள்ளாட்சி தேர்தலுக்காகவும் சட்டசபை தேர்தலுக்காகவும் தீவிரமாக தயாராகி வருகிறது.
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி உள்ளாட்சி தேர்தலுக்காகவும் சட்டசபை தேர்தலுக்காகவும் தீவிரமாக தயாராகி வருகிறது. இதற்காக அக்கட்சி அரசியல் ஆலேசகர் பிரசாந்த் கிஷோரை தங்களது பிரச்சாரம் மற்றும் அரசியல் திட்டங்களை வகுக்க நியமித்துள்ளது.
இந்தியாவில் உள்ள அரசியல் ஆலோசகர்களில் பிரசாந்த் கிஷோர் மிகவும் முக்கியமானவர். முக்கியமாக பாஜக கட்சிக்கு கடந்த மூன்று முக்கியமான தேர்தல்களில் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை வழங்கி உள்ளார்.
அதேபோல் பிரதமர் மோடிக்கு தனிப்பட்ட வகையில் பொது இடத்தில் பேசுவது எப்படி, பேட்டிகளில், அரசியல் கூட்டங்களில் பேசுவது எப்படி என்றும் கூட பிரசாந்த் கிஷோர் ஆலோசனை வழங்கி உள்ளார்.
என்ன ஆலோசனை
இந்த நிலையில் தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பிரசாந்த் கிஷோர் ஆலோசனை வழங்கி வருகிறார். தேர்தலை எப்படி எதிர்கொள்வது, தேர்தலுக்கு எப்படி தயார் ஆவது, கட்சியை எப்படி வலிமைப்படுத்துவது என்று ஆலோசனை வழங்கி வருகிறார். சட்டசபை தேர்தல் வரை மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இவர் ஆலோசனை வழங்குவார்.
என்ன சொன்னார்
மக்கள் நீதி மய்யம் கட்சியில் முக்கியமான அரசியல் தலைவர்களை சேர்க்க வேண்டும் என்று பிரசாந்த் கிஷோர் கமல்ஹாசனுக்கு ஆலோசனை வழங்கி உள்ளார். அதாவது தமிழகத்தில் அரசியல் உலகில் பிரபலமாக இருந்த, இருக்கும் நபர்களை கட்சிக்குள் சேர்க்க வேண்டும் என்று பிரசாந்த் கிஷோர் ஆலோசனை வழங்கி உள்ளார்.
ஆனால் கமல்
ஆனால் கமல்ஹாசன் இதை ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. தன்னுடைய கட்சியில், அணி மாறும் அரசியல்வாதிகளுக்கு இடமில்லை என்று அவர் கூறிவிட்டார் என்று கூறுகிறார்கள். ஆனால் மக்களுக்காக உழைத்த நேர்மையான அரசியல்வாதிகள் வந்தால் சேர்த்துக் கொள்வேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
என்ன எப்படி
அதாவது மக்களுக்காக உழைத்து, தவறுகள் செய்யாமல் இருந்த நேர்மையான அரசியல்வாதிகள் கட்சிக்கு வந்தால் ஏற்றுக்கொள்ளும் நிலையில் இருக்கிறார் என்கிறார்கள். இதற்கான பணியில் தற்போது மக்கள் நீதி மய்யம் இறங்கிவிட்டது என்றும் பிரசாந்த் கிஷோருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
வாய்ப்பு உள்ளது
இதனால் அடுத்த சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் முக்கிய பொறுப்பில் பெரிய அரசியல் தலைவர்கள் யாராவது இருக்க வாய்ப்புள்ளது. கட்சிக்கு முக்கிய ஆலோசனைகளை அவர்கள் வழங்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.