உள்ளாட்சித் தேர்தல்... புலி வருது கதையாக உள்ளது... மக்கள் நீதி மய்யம் சாடல்
சென்னை: உள்ளாட்சித் தேர்தலை பொறுத்தவரை கடந்த மூன்றாண்டுகளாக ''புலி வருது புலி வருது'' என்ற கதையாக உள்ளது என மக்கள் நீதி மய்யம் விமர்சித்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவரான குமரவேல் விடுத்துள்ள அறிக்கையில் அதிமுக, திமுக, ஆகிய இரண்டு கட்சிகளை சாடியுள்ளார்.
மேலும், அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் சேர்ந்து உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் பார்த்துக்கொள்வதாக கூறியுள்ளார்.
மக்கள் பிரச்சனை
கடந்த 2016-ல் நடந்திருக்க வேண்டிய உள்ளாட்சி தேர்தல் இன்றுவரை நடத்தப்படவில்லை என்றும், இதனால்அடிப்படை பிரச்சனைகளை கூட யாரிடம் சொல்வது எனத் தெரியாமல் மக்கள் தவித்து வருவதாகவும் குமரவேல் கூறியுள்ளார். உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் மக்களின் அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்ற முடியாத நிலை உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆளத்துடிக்கும் கட்சி
ஆளும் கட்சியும், ஆள்வதற்கு ஆலாய் பறக்கும் கட்சியும் உள்ளாட்சித் தேர்தலை பற்றி எந்த கவலையும் இல்லாமல் இருப்பதாகவும், சுயநலத்துக்காக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத வண்ணம் அந்த இரண்டு கட்சிகளும் பார்த்துக்கொள்வதாகவும் குமரவேல் தெரிவித்துள்ளார்.
3 ஆண்டுகளாக
உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில் கடந்த மூன்றாண்டுகளாக'' புலி வருது புலி வருது'' என்பது போல் தேர்தல் நடத்தப்போவதாகவும் அறிவிப்பதும், பின்னர் அதில் குறை இருப்பதாக எதிர்கட்சி நீதிமன்றத்துக்கு போவதும் என கண்ணாமூச்சி விளையாட்டு நடத்துவதாக கூறியுள்ளார்.
பாவனை
தேர்தல் நடத்தப்படுவதாக பாவனைக் காட்டி தனது கட்சிக்காரர்களிடம் விருப்பமனு பெறுவதும், மற்றொருபுறம் தேர்தலுக்கு தடை போட நீதிமன்ற வாசலில் நிற்பதும் தொடர்கதையாகிவிட்டதாக தெரிவித்துள்ளார் குமரவேல். இதுவரை மக்களை மட்டுமே ஏமாற்றி வந்த திமுக, அதிமுக, இப்போது கட்சிக்காரர்களையும் ஏமாற்றி வருவதாக சாடியுள்ளார்.